எனக்கு 1000 கோடி சொத்தா..?? அந்த நபரைதான் தேடிக் கொண்டிருக்கிறேன்.. செம்ம காண்டில் சீமான்.
வீடு காலிசெய்ய சொல்லி இருப்பதால் தனக்கு வீடு தேடிக் கொண்டிருப்பதாகவும். எனக்கு ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருப்பதாக பட்டியலை வெளியிட்ட நபரைதான் இப்போது தான் தேடிக் கொண்டிருப்பதாகவும், பட்டியலை வெளியிட்ட அவர் அதற்கான ஆதாரங்களை ஏன் வெளியிடவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
எனக்கு ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கூறிய நபரை தான் நான் தேடிக் கொண்டிருக்கிறேன் என்றும், வீடு காலி செய்ய கூறியுள்ள நிலையில் அடுத்த வீடு தேடிக் கொண்டிருப்பதாகவும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தனக்கு ஆயிரம் கோடிகள் சொத்து இருப்பதாக கூறிய நபர் ஏன் அதற்கான ஆதாரத்தை வெளியிடவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் நடந்த இன அழிப்புக்கு போருக்குப் பின்னர், அதை மையப்படுத்தி தமிழகத்தில் நாம் தமிழர் என்ற கட்சியை நடத்தி வருகிறார் சீமான். அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆகவும் அவர் இருந்து வருகிறார். தனது ஆக்ரோஷமான பேச்சால், இளைஞர்கள் பெண்கள் என அனைத்து தரப்பு மக்களின் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளார் ஆவர். தொடர்ந்து திமுகவையும் திராவிடத்தையும் அவர் குறிவைத்து பேசி வருகிறார். அவரின் பேச்சுக்கள் பல சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடலூரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி மறைந்த கடல் தீபன் படத்திறப்பு விழாவில் பேசிய சீமான்,
என்னிடம் எல்லோரும் கேட்கும் ஒரே கேள்வி உங்களுக்கு எங்கிருந்து வருமானம் வருகிறது? எப்படி சாப்பிடுகிறாய் என்கிறார்கள். ஒவ்வொருவரிடம் பணம் பெற்றுக் கொண்டு தான் செலவு செய்கிறேன், எனக்கு வெளிநாட்டிலிருந்து கோடிகோடியாக பணம் வருகிறது என்றும் கூறுகிறார்கள், நான் கேட்கிறேன் வெல்லமண்டி வைத்திருந்த எடப்பாடி பழனிச்சாமி எப்படி இவ்வளவு பெரிய பணக்காரரானார் என கேட்கிறீர்களா? தம்பி உதயநிதி தொடர்ச்சியாக படமெடுக்கிறார் ஒரு படம் கூட ஓடவில்லை, ஆனால் தொடர்ந்து உதயநிதி படமெடுக்கிறார் பணம் எப்படி வருகிறது என்று அவரிடம் கேட்டு இருக்க வேண்டுமே இவ்வளவு பெரிய வீடுகளைக் கட்டி வாழ்கிறீர்கள் ஆனால் எனக்கு சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை, இந்த நாட்டையே அடைய துடிக்கும் எனக்கு வாழ்வதற்கு வீடு இல்லை என்பது எவ்வளவு பெரிய வரலாற்றுத் துயரம் என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இது சமூக வலைதளத்தில் வைரல் ஆனது. உண்மையிலேயே சீமானுக்கு வீடு இல்லையா? என பலரும் ஆச்சர்யத்துடன் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்று, அவரது மனைவி மீது உள்ள சொத்து விவரத்தை சில ஆதாரங்களுடன் வெளியிட்டது. அதில், சீமானின் மனைவி கயல்விழியின் பெயரில் கொடைக்கானல் வில்பட்டி என்ற பகுதியில் 6 ஏக்கர் நிலம் உள்ளது என்றும், கிட்டத்தட்ட 12 கோடி ரூபாய் அளவுக்கு தன் மனைவியில் பெயரில் சொத்தை கையில் வைத்துள்ள சீமான், உண்மைக்கு புறம்பாக தனக்கு சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை என பேசி வருகிறார். இந்த ஒரு இடத்தில் இருக்கிற சொத்தின் ஆதாரம் மட்டுமே இது என்றும், இன்னும் எந்தெந்த இடத்தில் இதுபோல சொத்து இருக்கிறது என்பது தெரியாது எனவும் அந்த யூடியூப் சேனல் செய்திவிட்டது. அதனையடுத்து பலரும் சீமானை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய 65ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, சென்னை சின்ன போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது பேசிய அவர், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் உள்ள 7 தமிழர்கள் விவகாரத்திலும், அதேபோல் சிறைகளில் வாடும் இஸ்லாமிய கைதிகளை விடுதலை விவகாரத்திலும் திமுக இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டினார்.
மாவீரன் பிரபாகரன் பிறந்தநாள் விழாவில் நாம்தமிழர் கட்சி சுவரொட்டிகளில் அவரது புகைப்படத்தை தவிர்த்ததற்கு காரணம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளதுதான் என்றார். அதனால்தான் அவரின் புகைப்படம் தவிர்க்க பட்டதாகவும் கூறினார். தமிழகத்தில் நடைபெற உள்ள நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட இருப்பதாகவும் அதற்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். வீடு காலிசெய்ய சொல்லி இருப்பதால் தனக்கு வீடு தேடிக் கொண்டிருப்பதாகவும். எனக்கு ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருப்பதாக பட்டியலை வெளியிட்ட நபரைதான் இப்போது தான் தேடிக் கொண்டிருப்பதாகவும், பட்டியலை வெளியிட்ட அவர் அதற்கான ஆதாரங்களை ஏன் வெளியிடவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.