I do not want to talk about CM Edappadi Palanasamy
மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் தமிழக அரசுக்கு அக்கறையே இல்லை என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பற்றி பேச விருப்பமே இல்லை என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில், பொங்க பரிசு பொருட்கள் வழங்கும் விழா, சேலம் மாவட்டம், தாராமங்கலத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், மற்றும் சேலம் மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில், தேமுதிக சார்பில், ஏழைகளுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இரண்டாயிரம் பேருக்கு இலவச பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
பொங்கல் பரிசு பொருட்களை வழங்கிய பின், விஜயகாந்த் பேசினார். அப்போது, மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் தமிழக அரசுக்கு அக்கறையே இல்லை என்று குற்றம் சாட்டினார்.
எங்கு போனாலும் இந்த ஆட்சி எப்படி நடக்கிறது? என்று கேட்கிறார்கள். உண்மையில் எனக்கு எடப்பாடி பழனிசாமியை பற்றி பேச விருப்பமே இல்லை
என்றார்.
அந்த அளவுக்கு ஒரு மோசமான ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனை, சிவகாசியில் பட்டாசு ஆலை
உற்பத்தியாளர்கள் பிரச்சனை என இரண்டு முக்கிய தொழிலாளர்கள் பிரச்சனை நடந்து கொண்ருக்கிறது.
ஆனால், அதைப்பற்றி இந்த அரசும், அதிகாரத்தில் இருப்பவர்களும் கொஞ்சம் கூட கவலைப்பட்டதாக தெரியவில்லை என்று விஜயகாந்த் வேதனை தெரிவித்தார்.

பின்னர் பேசிய பிரேமலதா விஜயகாந்த், மக்கள் பிரச்சனையைப் பற்றி எடுத்து பேசவும், போராட்டம் நடத்தவும் ஒரு தைரியம் வேண்டும். அந்த தைரியம் நமது விஜயகாந்துக்கு உண்டு என்றார். சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது, ஜெயலலிதாவையே எதிர்த்துப் பேசியவர் விஜயகாந்த். அவர் யாருக்கும் பயப்படமாட்டார் என்றார்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பக்கூடிய ஒரே தலைவர் விஜயகாந்த் மட்டுமே. விரைவில் அவரது தலைமையில் நல்லாட்சி மலரும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
