எனக்கு சொந்த வீடு கூட கிடையாது... திமுக அராஜகம் ரொம்ப நாள் நிலைக்காது... ஐ.டி. ரெய்டால் கொதிக்கும் விஜயபாஸ்கர்
எனது வீடு உள்ளிட்டவற்றில் லஞ்சஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தியது பழிவாங்கும் நடவடிக்கையின் முதல் கட்டம். எனக்கு கரூரிலும், சென்னையிலும் சொந்த வீடு கிடையாது. பல ஆண்டுகளாக பல்வேறு தொழில்களை செய்து வருகிறேன். எந்த ஆவணமும் சிக்கவில்லை. கைப்பற்றப்பட்ட பணத்துக்கு கணக்கு உள்ளது.
எனது வீடு உள்ளிட்டவற்றில் லஞ்சஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தியது பழிவாங்கும் நடவடிக்கையின் முதல் கட்டம் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்கள் மற்றும் உறவினர்கள் வீடு ஆதரவாளர்கள் வீடு என சென்னை மற்றும் கரூரில் சுமார் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு மேற்கொண்டு இந்த சோதனையை நடத்தினர். போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது தேசிய நெடுஞ்சாலைகளில் ஸ்டிக்கர், ஒளிப்பட்டை, நவீன கருவிகள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பான டெண்டரை 23 கோடி ரூபாயில் இருந்து 900 கோடி ரூபாயாக உயர்த்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக தரப்பில் கடந்த ஆண்டு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஒரு மாத காலம் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருமானத்திற்கு அதிகமாக எம் ஆர் விஜயபாஸ்கர் சொத்து சேர்த்ததற்கான முகாந்திரத்தை உறுதிப்படுத்தினர். இதன் அடிப்படையில் நடந்த சோதனையில் சுமார் 25 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் முக்கிய ஆவணங்கள், காப்பீடு தொடர்பான ஆவணங்கள், முதலீடு தொடர்பான ஆவணங்களையும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும், அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்;- எனது வீடு உள்ளிட்டவற்றில் லஞ்சஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தியது பழிவாங்கும் நடவடிக்கையின் முதல் கட்டம். எனக்கு கரூரிலும், சென்னையிலும் சொந்த வீடு கிடையாது. பல ஆண்டுகளாக பல்வேறு தொழில்களை செய்து வருகிறேன். எந்த ஆவணமும் சிக்கவில்லை. கைப்பற்றப்பட்ட பணத்துக்கு கணக்கு உள்ளது. உரிய ஆவணங்களை சமர்ப்பிப்போம். எனது வங்கி கணக்குகள் எதுவும் முடக்கப்படவில்லை. லஞ்ச ஒழிப்பு சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்வோம்.
கரூரில் அதிமுகவினருக்கு பல தொல்லைகளைத் தந்து திமுகவுக்கு மாற வைக்கின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்பது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தமிழகத்தில் திமுகவினரின் அராஜக போக்கு நீண்ட நாள் நீடிக்காது. தமிழகத்தில் மின் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. கொரோனா முதல் அலையை விறப்பாக கையாண்டது அதிமுக அரசு. இரண்டாம் அலையை கட்டுப்படுத்த முடியாமல் திமுக அரசு திணறி வருகிறது. கொரோனா தடுப்பூசி டோக்கன் வழங்குவதில் முறைகேடு நடந்து வருகிறது என கூறியுள்ளார்.