எச். ராஜா ஒரு நல்ல மனிதர். அவருக்கு கவர்னர் பதவி கிடைத்தால் சந்தோஷம், ஆளுநராக நியமிக்கப்படுவாரா அல்லது கேரள ஆளுநராக நியமிக்கப்பட உள்ளாரா என்பதை குறித்து எனக்கு தெரியாது. நான் அந்த தேர்வுக்குழுவில் இல்லை.
எச். ராஜா ஆளுநராக நியமிக்கப்படுவாரா இல்லையா என்பது குறித்து தனக்குத் தெரியாது என்றும், அதற்கான தேர்வு குழுவில் தான் இல்லை என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். துணைவேந்தர்களை மாநில அரசே இனி தேர்வு செய்யும் சட்ட மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும், அது மாநில அரசின் காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பாஜக அரசின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகிறது. அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் தாங்களே உண்மையான எதிர்க்கட்சி என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சியில் பாஜக செயல்பட்டு வருகிறது. அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இது ஒருபுறமிருக்க பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பதற்கான சட்ட மசோதா இன்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது:-

பாஜக சார்பாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஒரு நாள் இலவச பயிற்சி, தாமரை இலவச பொதுத்தேர்வு என்ற மையத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் துணைவேந்தர்களை மாநில அரசு நியமனம் செய்யும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. பாஜக இந்த மசோதாவுக்கு சட்டமன்றத்திலேயே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திமுக அரசு துணைவேந்தர் பதவியை தங்களுக்கு சாதகமானவர்களுக்கு வழங்குகிறது. துணைவேந்தர் பதவியை வியாபாரமாக அவர்கள் கடைபிடித்து வருகின்றனர். ஆனால் பல நல்ல துணைவேந்தர்களை ஆளுநர் நியமனம் செய்துள்ளார். இருப்பினும் ஆளுநரே இந்த துணைவேந்தர்களை நேரடியாக நியமனம் செய்யவில்லை, தேர்வு குழுவின் பரிசீலனையில் இது நடைபெறுகிறது. இதில் மாநில அரசின் தலையிடும் உள்ளது.

மொத்தத்தில் இந்தத் தீர்மானம் திமுக அரசின் காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது என்றார். அப்போது எச்.ராஜா கேரள மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வருகிறதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், எச். ராஜா ஒரு நல்ல மனிதர். அவருக்கு கவர்னர் பதவி கிடைத்தால் சந்தோஷம், ஆளுநராக நியமிக்கப்படுவாரா அல்லது கேரள ஆளுநராக நியமிக்கப்பட உள்ளாரா என்பதை குறித்து எனக்கு தெரியாது. நான் அந்த தேர்வுக்குழுவில் இல்லை. அதேபோல் ராஜ் பவனை காலி செய்துவிட்டது, அமைச்சர்கள் வசிக்கும் இடத்திலேயே ஆளுநருக்கு இடமளிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, ஆளுநர் மாளிகையில் பல்வேறு அரசியல் பணிகள் நடைபெற்று வருகிறது, அவற்றையெல்லாம் விடுதலை சிறுத்தை கட்சி நபர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
