Asianet News TamilAsianet News Tamil

நீங்க சொன்னத நம்பி கடன் வாங்கிட்டேன் - சட்டு புட்டுனு 15 லட்சத்த அனுப்புங்க... மோடியிடம் வம்பு செஞ்ச தமிழக இளைஞர்... யார் தெரியுமா?

I am lucky enough to give you a loan
I am lucky enough to give you a loan
Author
First Published Feb 15, 2018, 4:42 PM IST


’மோடி நீங்க மானஸ்தன். சொன்னத செய்வீங்கன்னு இப்பவும் நம்புறேன். உங்க பிரச்சார பேச்சை நம்பி பதினஞ்சு லட்சம் கடன் வாங்கிட்டேன். வட்டி கொடுத்து சமாளிக்க முடியலை. சட்டுபுட்டுன்னு அந்த பணத்தை என்னோட அக்கவுண்டுல போட்டு விடுங்க.’

- இப்படி விரியும் அந்த கடிதம் ஒரு பக்கம் சிரிக்க வைத்தாலும் இன்னொரு பக்கம் ரூம் போட்டு யோசிக்க வைக்கிறது மோடியின் கண்டுகொள்ளாத குணத்தை.
கறுப்பு பணத்தை மீட்டு இந்தியர்கள் ஒவ்வொருவரின் அக்கவுண்டில் பதினைந்து லட்சம் பணம் போடுவதாக கடந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தார் மோடி. ஆனால் ஆட்சிக்கு வந்து இத்தனை வருடங்களாகியும்  பதினைந்து பைசா கூட போடவில்லை.

மாறாக ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்து மக்களை மாசக்கணக்கில் அலையவிட்டது, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு என்று போட்டுப் பிளக்கிறது மத்திய அரசு.

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த புஷ்பராஜ் என்பவர் மோடிக்கு அந்த பதினைந்து லட்சத்தை நினைவூட்டி ஒரு கடிதம் எழுதியிருப்பதாக டிஜிட்டல் கடிதமொன்று வாட்ஸ் ஆப்பில் வலம் வருகிறது.

அனுப்புநர்:-
அ.புஷ்பராஜ் பி.எஸ்.சி., பி.எல்.,
கடலூர் மாவட்டம்,
தமிழ்நாடு.
பெறுநர்:-
மாண்புமிகு மோடி,
இந்தியப்பிரதமர்,
புதுடெல்லி.

- என்று ஃபார்மலாக துவங்கும் அந்த கடிதத்தின் ஹைலைட் பாயிண்டுகள் இதோ...

*    கடந்த நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக மூன்று முறை சென்னை வந்தீர்கள். அப்போது ‘நான் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல லட்சம் கோடி கறுப்புப் பணத்தை மீட்பேன். மீட்டவுடன் ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கில் ரூபாய் பதினைந்து லட்சம் செலுத்துவேன். அதையும் நூறே நாட்களில் செய்வேன்.’ என்று பொதுமேடையில் வாக்குறுதி தந்தீர்கள். அய்யா நான் உங்களது தீவிர பக்தன். உங்கள் வார்த்தைகளை வேதமாக நினைப்பவன். ஆனால் என்னாச்சு நீங்கள் சொன்ன பதினைந்து லட்சம்?

*    நீங்கள் வாக்கு தவறாத பிரம்மாச்சாரி என்று எங்கள் ஊர் எச்.ராஜா அவர்களும் பல முறை தமிழர்களிடம் கூறியுள்ளார்.

*    உங்கள் வாக்குறுதியை நம்பி பதினைந்து லட்சம் கடன் வாங்கிவிட்டேன். இப்போது வட்டி கொடுத்து சமாளிக்க முடியவில்லை.

*    நீங்கள் சொன்ன 100 நாட்கள் இப்போது 1000 நாட்களாகிவிட்டது. ஆனால் பணம் இன்னும் வந்து சேரவில்லை. கடனோ ஏறிக்கொண்டே போகிறது.

*    பல முறை உங்கள் அலுவலகத்தை தொடர்பு கொண்டேன். ஆனால் நீங்கள் வெளிநாடுகளில் இருப்பதாக சொன்னார்கள்.

*    நீங்கள் கறுப்பு பணத்தை மீட்பீர்கள் என்று நான் நம்பினேன். எனக்கு கடன் தந்தவர்களும் அதை நம்பித்தான் எனக்கு பணம் தந்தார்கள். ஆனால் இன்னமும் என் அக்கவுண்டுக்கு பணம் வந்து சேரவில்லை. என்ன காரணம்?

*    கடந்த சில மாதங்களாக கறுப்பு பண விவகாரம் பற்றி நீங்கள் பேச மறுப்பது அதிர்ச்சி தருகிறது. மன் கீ பாத் நிகழ்ச்சியிலும் பதினைந்து லட்சம் பற்றி பேச மறுக்கிறீர்கள்.

*    எனக்கு உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனாலும் கடன் கொடுத்தவர்களை சமாளிக்க முடியவில்லை.

*    எனக்கு கடன் கொடுத்தவர்களில் சில வங்கிகளும் அடக்கம். அவர்கள் என்னை படுத்தியெடுக்கிறார்கள். உங்கள் அருண் ஜெட்லி வேறு வாராக்கடன்களை வசூலிக்க தீவிரப்படுத்தியுள்ளார்.

*     ஜி, நான் மல்லையா மாதிரி ஓடி ஒள்பவனல்ல. இங்கேயேதான் சுற்றிக் கொண்டிருக்கிறேன். வங்கிகள் என் நேர்மையை சந்தேகிப்பது பற்றி எனக்கு துளியும் கவலையில்லை. ஆனால் அவர்கள் உங்களின் நேர்மை மீது சந்தேகம் கொள்கிறார்களோ என்பதுதான் என் கவலை. அதனால்தான் விரட்டி விரட்டி என்னிடம் பணத்தை கேட்கிறார்கள். உங்களை அவர்கள் சந்தேகிப்பதை என்னால் சகிக்க முடியவில்லை.

*    எங்கள் வீட்டில் மொத்தம் 4 பேர். உங்களின் வாக்குறுதிப்படி ஆளுக்கு பதினைந்து லட்சமென்றால் மொத்தம் 60 லட்சம் எங்களுக்கு வரவேண்டும். அதை தந்துவிடுங்கள்.

*    போகிற போக்கில் தமிழகத்துக்கு சட்டமன்ற தேர்தல் வரும் போலிருக்கிறது. அதற்குள் பணத்தை போட்டுவிடுங்கள். ஏனென்றால் எங்கள் தமிழகத்துக்கு அடுத்த முறை நீங்கள் வரும் போது நமக்குள்ளான இந்த பணப்போக்குவரத்து க்ளியராக இருக்க வேண்டும். இல்லையென்றால் நமக்குள் வீண் மனஸ்தாபம் வரலாமென்பது எனது கணிப்பு, கவலை.

ஜெய்ஹிந்த்!
இணைப்பு:-
தலைக்கு பதினைந்து லட்சத்தை 100 நாட்களில் தருவதாக நீங்கள் மேடையில் உறுதியளித்த காணொலி பதிவு.
குறிப்பு:-

வாட்ஸ் ஆப்பில் நான் பதியும் மேற்படி கடிதத்தை பகிரும் எனது நண்பர்களின் வங்கிக் கணக்கிலும் உடனடியாக பதினைந்து லட்சத்தை போட்டுவிடவும். இதன் மூலம் இரண்டு லாபம்.

ஒன்று எனக்கு கமிஷன் கிடைக்கும். இன்னொன்று அடுத்த தேர்தலில் உங்கள் கட்சிக்கு டெப்பாசீட்டாவது கிடைக்கும்.
...இப்படியாக விரியும் அந்த கடிதம் தமிழக பா.ஜ.க.வினரை தெறிக்க விட்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios