காலா'வை தேவ கவுடா காப்பாற்றுவார்"! நேரம் பார்த்து ஐஸ் வைக்கும் ரஜினி...
காலா திரைப்படத்தை வெளியிட கர்நாடக முதல்வர் குமாரசாமி உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். படத்தை தடைசெய்ய தேவ கவுடா விடமாட்டார்" நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்த பிறகு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, "போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டனர் என்றும், எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும்" என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அவர், "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து நான் தெரிவித்த கருத்துகள் தவறாக சித்தரிக்கப்படுகின்றன. தற்போது தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. நான் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் உள்ளது. அதைப் பார்த்தாலே தெரியும். இதில் மறைப்பதற்கு ஒன்றும் கிடையாது" என்று குறிப்பிட்டார்.
"காலா படத்தால் கர்நாடகத்தில் பிரச்னை வராது என்று நினைக்கிறேன். காலா திரைப்படத்தை கர்நாடகத்தில் தமிழர்கள் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களும் பார்க்க விரும்புகின்றனர். எனவே அவர்களை ஏமாற்றக் கூடாது. திரைப்படத்தை வெளியிட கர்நாடக முதல்வர் குமாரசாமி உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். படத்தை தடைசெய்ய தேவ கவுடா விடமாட்டார்" என்று தெரிவித்த ரஜினிகாந்த், "அரசியலையும் தொழிலையும் ஒன்றுபடுத்தி பார்ப்பது சரியல்ல, ஆனால் இங்கே இரண்டையும் ஒன்றாகவே பார்க்கிறார்கள்.
காலா திரைப்படத்துக்கு அதிகம் எதிர்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தேன். தற்போது எதிர்ப்பு குறைவாக இருப்பதாகவே உணர்கிறேன். படம் நன்றாக இருந்தால்தான் மக்கள் வெற்றியடையச் செய்வார்கள்" என்றும் கூறினார்.