சர்ப்ரைஸ் கொடுத்த இரட்டைக்குழல் துப்பாக்கி…. மத்திய அரசுக்கு எதிராக களம் இறங்கிய இபிஎஸ்-ஓபிஎஸ் !!
உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இபிஎஸ்,ஓபிஎஸ் சேப்பாக்க பந்தலுக்கு வந்த சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். ஒரு மாநிலத்தில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும், அதை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம்தாழ்த்தி வருகிறது. எனவே, மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்போர் பட்டியல் அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டது. அந்தப்பட்டியலில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் பெயர்கள் இடம் பெறவில்லை.
தமிழகம் மட்டுமல்லாமல், புதுச்சேரி, காரைக்காலிலும் அ.தி.மு.க. அறிவித்த உண்ணாவிரத போராட்டம் அங்குள்ள நிர்வாகிகள் தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரை இந்தப் போராட்டம் தொடர்கிறது.
இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்ட முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வமும் கலந்து கொண்டுள்ளார்.
அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் எஸ்.கோகுல இந்திரா, மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, தி.நகர் சத்தியா, வி.என்.ரவி, டி.ஜி.வெங்கடேஷ்பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல், திருவள்ளூர், காஞ்சீபுரம், திருச்சி, தஞ்சாவூர், சேலம், கன்னியாகுமரி, திண்டுக்கல், ஈரோடு, தேனி, திருப்பூர், நாமக்கல், கோவை, விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், திருவாரூர், நெல்லை, சிவகங்கை, மதுரை, தர்மபுரி, நாகப்பட்டினம், நீலகிரி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, வேலூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை, விருதுநகர், கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.