h.raja talk about 18 mla case in chennai HC

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்த விவகாரத்தில் டி.டி.வி.தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கு என பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 21ம் தேதி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர் செல்வம் அணியும் ஒன்றாக இணைந்தன. அன்று மாலையே, அப்போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில் ஒ.பன்னீர்செல்வம் தமிழக துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.

இதனையடுத்து, டி.டி.வி. தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள், அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, தாங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையை இழந்து விட்டதாக கூறி கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை வழங்கினார்கள்.

மேலும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வரை மாற்றவேண்டும் எனவும், ஏன் ஒ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி தரப்பட்டது எனவும், முதல்வருக்கு பதிலாக சபாநாயகர் தனபாலுவை நியமிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இந்த நிலையில், கட்சி தலைமைக்கு எதிராக எம்எல்ஏ-க்கள் இணைந்து ஆளுநரிடம் கடிதம் கொடுத்து தவறு, தமிழக அரசின் தலைமை கொறடா என்ற முறையில் என்னிடம் தான் முதலில் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யமால், நேரடியாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது கட்சிக்கு விரோதமானது. எனவே கடிதம் கொடுத்த எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் மீது விசாரணை நடைபெற்று தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, ஓபிஎஸ் மற்றும் 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு ஆதரவி தெரிவிப்பதாக கூறினார்.

இதே போன்று டி.டி.வி. தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு வரும் என்று, தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்பே இன்று தெரிவித்தார்.