எத்தனை பொய்... பொறுமையிழக்கச் செய்த சசிகலா எனும் நான்... சவால் விடும் எடப்பாடி பழனிசாமி..!
சசிகலா எனும் நான் என்கிற நிகழ்ச்சி மூலம் ஜெயலலிதாவுடனான தொடர்பு, அனுபவங்கள், அதிமுகவில் தனக்கு இருக்கும் உரிமைகள் குறித்து சசிகலா பேட்டியளித்து வருகிறார்.
சசிகலா எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. அவர் அதிமுகவில் இருந்த காலகட்டத்திலும் தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். சிறையில் இருந்து விடுதலையான பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அறிவித்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக போட்டியிட்டு தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது.
பின்னர் அதிமுகவை கைப்பற்றியே தீருவேன் என தொண்டர்களிடம் தொலைபேசியில் உரையாடி அந்த ஆடியோவை நாள்தோறும் வெளியிட்டு வந்தது சசிகலா தரப்பு. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சியில் சசிகலா எனும் நான் என்கிற நிகழ்ச்சி மூலம் ஜெயலலிதாவுடனான தொடர்பு, அனுபவங்கள், அதிமுகவில் தனக்கு இருக்கும் உரிமைகள் குறித்து சசிகலா பேட்டியளித்து வருகிறார்.
இந்நிலையில் சேலம் மாவட்டம், எடப்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, “நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை திமுக ஏமாற்றி விட்டது. வாக்குகளைப் பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் திமுக மக்களை ஏமாற்றி விட்டது. சசிகலா இருந்தபோதும் அதிமுக தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது. எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் சசிகலாவால் அதிமுகவை வீழ்த்த முடியாது.” எனத் தெரிவித்துள்ளார்.