உங்களுக்கு எத்தனையோ வேலை இருக்கு... போயஸ்கார்டன் பக்கம் வந்துடாதீங்க... அதிமுகவினருக்கு தீபா எச்சரிக்கை..!
அம்மா அவர்கள் இந்த வீட்டை வைத்து அரசியல் செய்தது இல்லை; ஆனால், இப்போதைய அதிமுக தலைவர்கள் இந்த வீடு இல்லையென்றால் அரசியல் இல்லை என்பது போல செயல்பட்டு வருகின்றனர்.
வேதா இல்ல சாவியை பெற்றுக்கொண்டதன் மூலம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடையும் என ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசுடமையாக்கப்படும் என கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தமிழ்நாடு அரசு சார்பில் நிலத்தை கையகப்படுத்துவதற்கான தொகையையும் உரிமையியல் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டு, வேதா இல்லம் அரசின் சொத்தாக்கப்பட்டது. நீதிமன்றத்தை நாடி வாரிசுதாரர்கள் தங்களுக்கான தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது.
இதனை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசுகள் தீபா, தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் செல்லாது என்று அண்மையில் உத்தரவிட்டார். ஜெயலலிதா வாரிசுகள் என அறிவிக்கப்பட்ட தீபா, தீபக்கிடம் வேதா இல்லத்தின் சாவியை 3 வாரங்களில் ஒப்படைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
1967-ல் ஜெயலலிதாவும் ரவிசந்திரனும் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் மாடி வீட்டு மாப்பிள்ளை!
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து உற்சாகமாக கையசைத்த ஜெ.தீபா. ஜெ, சசிகலாவுக்கு அடுத்து இப்படி கை அசைக்கும் மூன்றாவது நபர் ஜெ.தீபா.
இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தின் சாவியை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தீபா, தீபக் ஆகியோரிடம் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி இன்று ஒப்படைத்தார். பின்னர் போயஸ் கார்டன் இல்லத்துக்குள் சென்ற தீபாவும், அவரது கணவர் மாதவனும் மாடியில் இருந்து ஜெயலலிதா ஸ்டைலில் கையசைத்தனர். அங்கிருந்த ஜெயலலிதா புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தீபா, ’’எனது வாழ்வில் இப்படியொரு திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை. வீட்டை மீட்பதற்கு என்னால் முடிந்த அளவு முயற்சி செய்தேன்.
இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. வேதா இல்லத்தில் வசிக்க முடிவு செய்துள்ளோம். வேதா இல்ல சாவியை பெற்றுக்கொண்டதன் மூலம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடையும். அதிமுகவுக்கு செய்ய வேண்டிய பணிகள் எத்தனையோ இருக்கு.. இது அறிவுரை இல்ல. பொதுக் கருத்து.
அம்மா அவர்கள் இந்த வீட்டை வைத்து அரசியல் செய்தது இல்லை; ஆனால், இப்போதைய அதிமுக தலைவர்கள் இந்த வீடு இல்லையென்றால் அரசியல் இல்லை என்பது போல செயல்பட்டு வருகின்றனர். என்னைப் பொருத்தவரை இது எப்போதுமே என் அத்தை வீடு; இங்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதே முதல் பணி எனவும் தெரிவித்தார்.