இந்துக்கள் எங்கும் நிம்மதியாக இல்லை... கட்டாய மதமாற்றம் செய்கிறார்கள்... பொங்கும் கிருஷ்ணசாமி..!
இந்துக்களுக்கு ஒரு வீழ்ச்சி என்றால், அது வெளியில் இருந்து வந்த தாக்குதல்களால் வந்தது கிடையாது. உள்ளுக்குள் இருக்கிற பிரச்சினைகளால்தான் பலவீனம் வந்தது என்பது என்னுடைய கருத்து.
சர்வதேச அளவில் இந்துக்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இங்கேயும் வந்துவிடக்கூடாது என்பதால்தான் நான் இந்து ஒற்றுமை பற்றி பேசுகிறேன் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ‘’இந்து என்று சொன்னால், அது பாஜகவுக்கு மட்டுமே சொந்தமாகிவிடுமா? உங்கள் பார்வையே தவறு. இந்து ஒற்றுமை என்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு கோணம் இருக்கிறது. இந்துக்களுக்கு ஒரு வீழ்ச்சி என்றால், அது வெளியில் இருந்து வந்த தாக்குதல்களால் வந்தது கிடையாது. உள்ளுக்குள் இருக்கிற பிரச்சினைகளால்தான் பலவீனம் வந்தது என்பது என்னுடைய கருத்து. இந்துக்களுக்குள் ஒற்றுமை இல்லையென்றால், அது இந்தியாவுக்கே பிளவினை ஏற்படுத்தும். வ.உ.சி., பாரதியார், கட்டபொம்மன், காந்தி எல்லோரும் தேசபக்தி இந்துக்கள் ஒற்றுமை பற்றிப் பேசினார்கள். அவர்கள் எல்லாம் பாஜகவா?
அண்டை நாடான பங்களாதேஷில் துர்கா பூஜை சமயத்தில் குரானை கொண்டுபோய் செயற்கையாக வைத்து, வேண்டுமென்றே கலவரத்தை ஏற்படுத்தி அங்கே 22 மாவட்டங்களில் இந்துக்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த மக்கள் நிர்கதியாக நிற்கிறார்கள். அதைக் கண்டித்து தமிழ்நாட்டில் எந்த இயக்கமும் குரல்கொடுக்கவில்லை என்பதற்காக நானும் அமைதியாக இருக்க வேண்டுமா? பங்களாதேஷ் என்றில்லை, இலங்கையில் போரில் கணவனை இழந்த 42 ஆயிரம் தமிழ்ப்பெண்களை கட்டாய மதமாற்றம் செய்யும் பிரச்சினையிலும் நான் பேசியிருக்கிறேன். அதேபோல பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலும் இந்துக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. சர்வதேச அளவில் இந்துக்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இங்கேயும் வந்துவிடக்கூடாது என்பதால்தான் நான் இந்து ஒற்றுமை பற்றி பேசுகிறேன்.
ஆதிதிராவிடர் என்கிற அடையாளம் வேண்டாம் என்றுதான் அம்மக்கள் தேவேந்திர குல வேளாளர் எனும் அடையாளத்துக்காகப் போராடுகிறார்கள். அவர்களுக்கு அதே ஆதிதிராவிடர் நலத் துறையை வலிந்துகொண்டுபோய் திணிப்பது எந்த வகையில் நியாயம்? இந்தப் பிரதிநிதித்துவம் எப்படி அம்மக்களைத் திருப்திப்படுத்தும்?’’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.