இஸ்லாமியர்களுக்கு 4000 மெட்ரிக் டன் அரிசி: ஆடி மாதம் கூழ் ஊற்ற தானியம் கொடுங்க.. இந்து மக்கள் கட்சி அதிரடி.
மத ரீதியாக கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்த தமிழக அரசுக்கு நன்றி. ஆனால் அவரை தேச துரோக வழக்கில் கைது செய்யவேண்டும் என்று கூறினார்.
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைமையகத்தில் ஆறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இந்து மக்கள் கட்சி சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை தி.நகரில் உள்ள இந்து மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு முன்பு, இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் செந்தில் தலைமையில் 10க்கும் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோஷங்கள் எழுப்பினர்.
பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்து மக்கள் கட்சியின் மாநில பொது செயலாளர் செந்தில் , தன்னுடைய 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பேசியனார் அப்போது அவர் கூறியதாவது, மத ரீதியாக கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்த தமிழக அரசுக்கு நன்றி. ஆனால் அவரை தேச துரோக வழக்கில் கைது செய்யவேண்டும் என்று கூறினார். தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் என்றும்,
தமிழகத்தில் தொடர்ந்து மின்சாரக் கட்டணம் உயர்ந்து கொண்டு வருவதால் மின்சார வைப்புத் தொகையும் உயர்ந்திருக்கிறது. இத்தகைய சூழலால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மின்சார வைப்புத் தொகையை திரும்பப் பெறவேண்டும் என்றும் கூறினார். மேலும் பள்ளிகளில் படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கக்கூடிய உதவித்தொகையை போல இந்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு முஸ்லிம்களுக்கு 4000 டன் மெட்ரிக் அரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டது, அதேபோல இந்துக்களுக்கும் ஆடி மாதம் அம்மன் கோயில்களில் கூழ் வார்க்கும் நிகழ்விற்கு இலவச தானியம் வழங்கிட வேண்டும் என தெரிவித்தார். மேலும் திமுக அரசு தன்னுடைய தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை 5 ரூபாய் குறைக்கும் என்று கூறியிருந்த நிலையில் உடனடியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ரூபாய் 5 குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.