‘டைப்பிங்’ மிஸ்டேக்… முதல்வர் பதவிக்கு வேட்டா? இமாச்சலில் நடக்கும் குழப்பம்
டைப்பிங் மிஸ்டேக்கால் பாஜக ஆளும் இமாச்சல பிரசேதத்தில் முதலமைச்சருக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டு இருக்கிறது.
சிம்லா: டைப்பிங் மிஸ்டேக்கால் பாஜக ஆளும் இமாச்சல பிரசேதத்தில் முதலமைச்சருக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டு இருக்கிறது.
2024ம் ஆண்டு மக்களவை தேர்தலை நோக்கி, பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இப்போதே தயாராகி வருகின்றன. அதற்கு முன்னதாக சட்டசபை தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களில் தீவிர கவனத்தை செலுத்தி வருகின்றன.
இந் நிலையில், இமாச்சல பிரதேசத்தில் மக்கள் தொடர்பு துறை செய்த ஒரு சிறு தவறு பெரும் பேச்சுகளுக்கும், யூகங்களுக்கும் வழிவகுத்துள்ளது. அம்மாநிலத்தில் முதல்வராக தற்போது இருப்பவர் ஜெய்ராம் தாக்கூர்.
அண்மையில் மக்கள் தொடர்புத்துறையின் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிடப்பட்டு இருந்தது. அந்த பதிவில் முதல்வரின் பெயரை அடிப்பதற்கு பதில் ஜாவோ ராம் என்று அடித்துவிட்டனர். இந்தியில் அந்த பெயர் டைப் செய்யப்பட்டு இருந்தது.
இந்தி மொழியில் ஜாவோ என்றால் சென்றுவிடு அல்லது போய்விடு என்று அர்த்தம். இந்த தவறை அறிந்து கொண்ட மக்கள் தொடர்பு துறை அதை பின்னர் திருத்தியது.
தவறு திருத்தப்பட்டாலும் யூகங்களுக்கும், வதந்திகளுக்கும் பஞ்சமில்லாத அளவுக்கு அரசியல் கருத்துகள் பரவி வருகின்றன. இமாச்சல பிரதேசத்தின் முதல் அமைச்சர் மாற்றப்படுகிறார், அதற்கான இப்படி செய்யப்பட்டது, இது ஒரு குறிப்பே என்றும் செய்திகள் பரவின.
இதற்காக தான் காத்திருந்தது போன்று காங்கிரசும் ஒரு பக்கம் முதலமைச்சர் மாற்றப்பட போகிறார், அதற்கான முன்னோட்டம் என்று அடித்துவிட்டு இருக்கிறது.
இது குறித்து தமது கருத்தை வெளியிட்டு உள்ள அம்மாநில காங்கிரஸ் தலைவர் குல்தீப் ரத்தோர், இது எதிர்பாராத தவறாக கூட இருக்கலாம். ஆனால் என்ன நடக்க இருக்கிறதோ அது தான் வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது. முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் விரைவில் அந்த பதவியில் இருநது மாற்றப்பட போகிறார், அதுதான் உண்மை என்று கூறி இருக்கிறார்.
முன்னதாக பாஜக ஆளும் கர்நாடகா, குஜராத், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் முதலமைச்சர்கள் மாற்றப்பட்டனர். இதை பார்க்கும் போது காங்கிரஸ் சொல்வது உண்மையாகி விடுமோ என்று எண்ண தோன்றுவதாக கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்…!