high court want to regulate banner rules

பேனர், கட் அவுட் விவகாரத்தில் கேரளாவை முன்னுதாரணமாகக் காட்டிய நீதிபதிகள், அரசின் அனுமதி அளிக்கும் நடைமுறையை ஆய்வு செய்யும் நேரம் வந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உயிரோடு இருப்பவர்களுக்கு பேனர், கட் அவுட் ஆகியவை வைக்க தடை விதித்து கடந்த அக்டோபர் 22-ம் தேதி உயர்நீதிமன்ற தனி நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டார்.

பேனர், கட் அவுட் தொடர்பான உத்தரவை முறையாக பின்பற்றுமாறு நீதிமன்றம் கடுமையாக உத்தரவிட்டது. பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க நீதிமன்றம் தொடர்ச்சியாக கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தது. அதனால் ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் சுய விளம்பரம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாநகராட்சி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதிகள், சிவஞானம், ரவிச்சந்திரபாபு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, உயிரோடு இருப்பவர்களுக்கு பேனர் வைக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என வாதிட்டார். அந்த உத்தரவால் வர்த்தக ரீதியான விளம்பரங்களைச் செய்ய முடியவில்லை. அதனால் சென்னை மாநகராட்சியின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது என கூறினார். 

இதைக்கேட்ட நீதிபதிகள், வருவாய் நோக்கத்திற்காக மட்டுமே பேனர், கட் அவுட்கள் வைக்க அனுமதிப்பதா? என நீதிபதி கேள்வி எழுப்பினர். மேலும், இந்த விளம்பர பதாகைகளால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்திப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என கடிந்துகொண்டனர். கட் அவுட், பேனர் வைக்க அனுமதி அளிக்கும் அரசின் நடைமுறையை, சட்டப்பிரிவை மறு ஆய்வு செய்யும் நேரம் வந்துவிட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

கேரளாவில் தேர்தல் நேரத்தில் மட்டுமே பேனர் வைக்கிறார்கள். அதுவும் மூங்கிலில் வைக்கப்படுவதால், நாளடைவில் மக்கி விடுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் அதுபோன்று கிடையாது. தற்போது அதை கட்டுபடுத்த நேரம் வந்துள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்காமல், வழக்கை தலைமை நீதிபதி அமர்வு விசாரிப்பதற்காக வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.