high court explained why discharge the mla disqualification seeking case
அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்க கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களும் எம்.எல்.ஏக்களாக நீடிப்பார்கள்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, பல விவகாரங்களுக்கு பின்னர் முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்றார். அப்போது பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணி தனியாக செயல்பட்டது. அந்த சமயத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி நடந்தது.
அந்த வாக்கெடுப்பில், அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி, எம்.எல்.ஏக்கள் ஓ.பன்னீர்செல்வம், ஆறுக்குட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், கே.பாண்டியராஜன், மனோரஞ்சிதம், சரவணன், செம்மலை, சின்னராஜ் மற்றும் ஆர்.நட்ராஜ் ஆகிய 11 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
இதற்கிடையே முதல்வர் பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததற்காக தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். அதற்கு எதிராக எம்.எல்.ஏக்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதையடுத்து, திமுக கொறடா சக்கரபாணி சார்பில், கட்சி கொறடாவின் உத்தரவை மீறி நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்த பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தினகரன் சார்பில் தொடரப்பட்ட வழக்கும் இத்துடன் இணைத்து கொள்ளப்பட்டது.
இந்த வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான முதல் அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், சபாநாயகரின் முடிவே இறுதியானது. அதனால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி, 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி, வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
