Asianet News TamilAsianet News Tamil

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் !! ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு

கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
 

high court allow to buried karunanidhi in merina
Author
Chennai, First Published Aug 8, 2018, 10:48 AM IST

கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

அனைத்து திராவிட தலைவர்களுக்கும் மெரினாவில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும்போது, கருணாநிதிக்கு மட்டும் ஏன் கிடையாது? என திமுக வழக்கறிஞர் வில்சன் உயர்நீதிமன்றத்தில் வாதிட்டார். 

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரை மெரினாவில் அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய, திமுக சார்பில் முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும் நீதிமன்றத்தில் நிலுவைகளில் உள்ள வழக்குகள் மற்றும் சட்ட சிக்கல்களை காரணம் காட்டி மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி மறுத்த தமிழக அரசு, காந்தி மணிமண்டபத்தில் காமராஜர் நினைவிடம் அருகே இடம் ஒதுக்கியது. 

இதையடுத்து திமுக தலைவர் கருணாநிதியை அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்வதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டு அந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு)  ஹூலுவாடி ரமேஷ் முன்பு விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணையில், காலை 10.30 மணி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை பரிசீலித்த நீதிபதிகள் காலை 8.30 மணிக்கு தீர்ப்பை ஒத்திவைத்தனர். 

இதையடுத்து இன்று காலை இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் மற்றும் நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய வேறு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், கடற்கரையில் உடலை அடக்கம் செய்யக்கூடாது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் அரசு வழக்கறிஞர் வாதிட்டார். 

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வழக்கறிஞர் துரைசாமி 4 வழக்குகளும், பாமுக பாலு ஒரு வழக்கும், டிராபிக் ராமசாமி ஒரு வழக்கும் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை காரணம் காட்டி கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கக்  கூடாது என துரைசாமி, பாலு ஆகியோர் தாங்கள் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றனர். கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய எதிர்ப்பு இல்லை என டிராபிக் ராமசாமி தெரிவித்தார். 

இதையடுத்து அந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்வதில் தமிழக அரசை தவிர மற்ற எந்த எதிர்ப்பும் இல்லாத சூழல் உருவானது. இதையடுத்து, மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என்ற தலைமை செயலாளரின் அறிக்கைக்கு எதிராக திமுக வழக்கு தொடர முடியாது என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். ராஜாஜி, காமராஜர் சித்தாந்தம் வேறு, திராவிட சித்தாந்தம் வேறு; எனவே கருணாநிதியின் சித்தாந்தத்தின் அடிப்படையில், மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என திமுக வழக்கறிஞர் வில்சன் வாதிட்டர். அனைத்து திராவிட தலைவர்களுக்கும் மெரினாவில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், கருணாநிதிக்கு மட்டும் ஏன் கிடையாது? என திமுக வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார். 

மேலும் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்யாவிட்டால், அது நல்லடக்கமாக இருக்காது. 1988 அரசு உத்தரவுபடி ஏற்கனவே மெரினாவை மயானமாகவும், நினைவிடமாகவும் அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி. 13 முறை எம்எல்ஏவாக இருந்த கருணாநிதிக்கு, மெரினாவில் இடம் ஒதுக்காவிட்டால் தொண்டர்கள் உணர்வுகளை புண்படுத்தும் என திமுக தரப்பில் வாதிடப்பட்டது. 

இதையடுத்து வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், மெரினாவில் நினைவிடங்களுக்கு எதிரான வழக்குகளை திமுக வாபஸ் பெற வைத்துள்ளது என வாதிட்டார். 

அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதத்திற்கு நீதிமன்றத்தில் இருந்த திமுக வழக்கறிஞர்கள் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் நீதிமன்றத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. 

வழக்கறிஞர்களை அமைதி காக்கும்படி நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். பின்னர், மெரினாவில் நினைவிடங்கள் அமைப்பதற்கு தெரிவித்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில், மெரினாவில் இடம் ஒதுக்க அரசுக்கு என்ன தடை? என நீதிபதி சுந்தர் கேள்வி எழுப்பினார். மேலும் ராஜாஜி, காமராஜர் ஆகியோருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழவில்லை என நீதிபதி கருத்து தெரிவித்தார். 

சட்ட சிக்கல், வழக்குகள் நிலுவை ஆகியவற்றை காரணம் காட்டி மெரினாவில் அடக்கம் செய்ய மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது மெரினாவில் நினைவிடங்கள் அமைக்க தடை கோரி தொடரப்பட்டிருந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. சட்ட சிக்கல்கள் இருப்பதாக கூறிவிட்டு அதற்கு முரணாக வாதாடுகிறீர்கள் என அரசு தரப்பு வழக்கறிஞரை நோக்கி நீதிபதி கருத்து தெரிவித்தார். 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி அளித்தது. 

Follow Us:
Download App:
  • android
  • ios