விடாது மோதல்... வரிந்து கட்டும் வாரிசுகள்... கண்டுகொள்ளாத கார்த்தி சிதம்பரம்..!
தலைமை வற்புறுத்தியதால் கார்த்தி சிதம்பரத்திற்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரவு கொடுத்தார். அந்த மோதம் இப்போதும் தொடர்ந்து வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், சுதர்சன நாச்சியப்பன் கோஷ்டி மட்டும் தான் இருந்தது. தேர்தல் முடிந்த பிறகு இவர்கள் இருவரது வாரிசுகளுக்கு இடையிலும் கோஷ்டிகள் உருவாகி விட்டது.
காங்கிரஸ் என்ன ப.சிதம்பரத்தின் குடும்பச் சொத்தா? எனக் கேட்டு, அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சிவகங்கை மக்களவைத் தொகுதியில் சீட் கொடுக்கக் கூடாது என முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுதர்சனநாச்சியப்பன் முட்டுக்கட்டை போட்டார்.
இதனால் சிவகங்கை தொகுதிக்கு மட்டும் காங். வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டது. இருந்தபோதிலும், காங்கிரஸ் தலைமையிடம் ப.சிதம்பரத்துக்கு இருந்த செல்வாக்கால், நீண்ட இழுபறிக்குப் பிறகு கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் கிடைத்தது. இதனால் அதிருப்தி அடைந்த சுதர்சனநாச்சியப்பன், ப. சிதம்பரத்துக்கு எதிராக ஊடகங்களில் ஆவேசமாகப் பேட்டி கொடுத்தார். பின்னர் தலைமை வற்புறுத்தியதால் கார்த்தி சிதம்பரத்திற்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரவு கொடுத்தார். அந்த மோதம் இப்போதும் தொடர்ந்து வருகிறது.
சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து சமீபத்தில் சிவகங்கை அரண்மனை வாசல் முன் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், தொகுதி எம்.பி.,யான கார்த்தி சிதம்பரமும், சுதர்சன நாச்சியப்பன் வாரிசான ஜெயசிம்மனும் கலந்து கொண்டார்கள். போராட்டத்தை துவக்கி வைக்க வந்த கார்த்தியை பார்த்து ஜெயசிம்மன் வணக்கம் வைக்க, அவரோ முகத்தை திருப்பிக் கொண்டுள்ளார்.
எதிரெதிர் கட்சியினர் கூட, நேரில் பார்த்தால் சிரித்து பேசிக்கொள்கிற இந்தக் காலத்தில் சொந்தக் கட்சிக்காரரையே மதிக்கவில்லை என்றால் எப்படி என காங்கிரசார் புலம்பிக் கொள்கிறார்கள்.