நாங்க நிச்சயதார்த்தம் செஞ்சிட்டோம், நீங்க தான் நல்லபடியா திருமணம் நடத்தி வைக்க வேண்டும் சட்டபேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜு பேசியதற்கு, பெண் பார்பது தான் தொடங்கியிருக்கு, இருந்தாலும் நிச்சயதார்த்தம் நடத்தி நிச்சயம் திருமணம் நடைபெறும் என்று அமைச்சரின் பதிலால் சட்டப்பேரவையில் கலகலப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு சட்டபேரவையில் கேள்வி நேரத்தின் போது, சட்டபேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜு, கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர் கல்லூரி அமைக்க அரசு முன் வருமா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கோவில்பட்டியிலுருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் விருதுநகர் மாவட்டத்தில் 100 இருக்கைகளுடன் 1 அரசு செவிலியர் பயிற்சி பள்ளி செயல்பாட்டு வருகிறது. அதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் 1 அரசு செவிலியர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது.
அனைத்து மாவட்டத்திலும் செவிலியர் பயிற்சி பள்ளி அல்லது செவிலியர் பயிற்சி கல்லூரி அமைக்கப்படும் என முதலமைச்சர் முன்னதாகவே அறிவித்திருந்தார். தூத்துக்குடியில் 1 அரசு செவிலியர் பள்ளி செயல்பட்டு வருகிறது. எனினும் கோவில்பட்டியில் அரசு செவிலியர் கல்லூரி, உறுப்பினர் கேட்டுள்ளார். அதற்கான நிலம் மாற்றம் பணிகள் 2020ஆம் ஆண்டே தொடங்கியுள்ளனர்.
ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பணிகள் நடைபெறவில்லை. முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து செல்ல பட்டுள்ளது, நிச்சயம் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பதிலளித்தார். இதற்கு சட்டபேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜு, மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி பகுதி வளர்ந்து வருகிறது. அந்த பகுதியில் செவிலியர் பயிற்சி பள்ளி வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. பல்வேறு பணிகளும் அங்கு நடந்தது, ஆனால் தேர்தல் வந்து அது நிலுவையில் உள்ளது. விரைவில் அந்த பணிகளை முடித்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதார துறைக்கு அரசு செவிலியர் பயிற்சி கல்லூரி அமைக்க நில மாற்றம் செய்தது 2020 ஆம் ஆண்டு தான். அதன் பிறகு எந்த பணிகள் நடைபெறவில்லை. இருப்பினும் கல்லூரி அமைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.இதற்கு சட்டபேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜு, நில வகைப்பாடு பணிகள் முடிந்துள்ளது. பகுதி மக்கள் கோரிக்கை என்னவென்றால் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் திருமணம் நடைபெற வேண்டும் என்பது தான் பாக்கி. நாங்கள் நிச்சிதார்த்தம் செய்து விட்டோம், இந்த அரசு திருமணத்தை நல்லபடியாக செய்து தர வேண்டும் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், நிச்சயதார்த்தம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் உண்மையில் நில மாற்றம் மட்டுமே நடந்திருக்க. குறுக்கீடு செய்த சபாநாயகர் அப்பாவு, பெண் பாத்திருக்காங்க...அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெண் பார்பது தான் தொடங்கியிருக்கு, இருந்தாலும் நிச்சயதார்த்தம் நடத்தி நிச்சயம் திருமணம் நடைபெறும் என தெரிவித்தார்.திருமணம் - நிச்சயதார்த்தம் என அதிமுக - திமுக பேசியது பேரவையில் கலகலப்பை ஏற்படுத்தியது
