சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் இடிக்கப்பட்டு ரூ.65 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படும் என  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில்,நேரம் இல்லா நேரத்தில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சட்டமன்ற கட்சிகள் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது..

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதற்கு பதிலளித்து பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நேற்று காலை சரியாக 10:21 மணியளவில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை நரம்பியல் கட்டிடத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், அந்த கட்டிடத்திலும், அதற்கு ஒட்டிய கட்டிடத்திலும் 128 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது என்றும், முதலமைச்சர் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டதாகவும் கூறினார்..

மேலும், சம்பவம் நடைபெற்ற 5-10 நிமிடங்களுக்குள்ளாவே 4 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட தொடங்கி விட்டதாக கூறிய அவர், ஊடகவியலாளர்களும் நேரடியாக நோயாளிகளை மீட்டனர் என்றும், அரசு எடுத்த அதிதீவிர நடவடிக்கையின் காரணமாக உயிரிழப்பு எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.

105 வருடம் பழமையான கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக குறிப்பிட்ட அவர், வேறு ஆட்சியாக இருந்திருந்தால் வேறு முதலமைச்சராக இருந்திருந்தால் 128 நபர்கள் உயிரிழந்திருப்பார்கள் என்றும், கடந்த 10 ஆண்டுகளில் முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளாததே விபத்திற்கு காரணம் எனவும் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் விபத்து நடைப்பெற்ற கட்டிடத்தை இடித்துவிட்டு 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்..