உலகத்திலேயே கட்சி தொடங்கி ஷூட்டிங் போற ஒரே தலைவர் அவருதான்... ரஜினியை ஜோதிமணி மரண கலாய்...!
உலகத்திலேயே எந்த அரசியல் கட்சி தலைவராவது கட்சி தொடங்கிவிட்டு 40 நாட்கள் ஷூட்டிங்கிற்கு செல்வார்களா என்று நடிகர் ரஜினிகாந்த் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் கரூர் எம்.பி. ஜோதிமணி.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் தேதியை டிசம்பர் 31 அறிவிப்பதாக தெரிவித்துள்ள நிலையில், தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாட பெங்களூருவுக்கு சென்றுவிட்டார். பெங்களூருவிலிருந்து ஹைதராபாத்தில் நடக்கும் ‘அண்ணாத்த’ சூட்டிங்கில் ரஜினி கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு கட்சி தேதியை அறிவித்து தீவிர அரசியலில் ரஜினி ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியின் அரசியல் வருகை குறித்து தமிழக எதிர்க்கட்சிகள் விமர்சித்து கருத்து தெரிவித்துவருகின்றன.
அந்த வகையில் புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கரூர் எம்.பி. ஜோதிமணி, ரஜினியை விமர்சித்து பேட்டி அளித்தார். ரஜினி குறித்து அவர் கூறுகையில், “அரசியல் என்பது ஒரு தீவிரமாக அணுகக்கூடிய விஷயம். இன்று அனைத்து கட்சி தலைவர்களும் வேறுபாடுகளின்றி களத்தில் நின்று மக்கள் பிரச்னைகளுக்காக போராடி வருகிறார்கள். மக்கள் குறைகளையெல்லாம் கேட்டு சேவை மனப்பான்மையோடு செய்யவேண்டிய ஒரு விஷயம்தான் அரசியல்.
ஆனால், உலகத்திலேயே எந்த அரசியல் கட்சி தலைவராவது கட்சி தொடங்கிவிட்டு 40 நாட்கள் ஷூட்டிங்கிற்கு செல்வார்களா? நான் ‘அண்ணாத்த’ ஷூட்டிங்கிற்கு செல்கிறேன் என்பவரை நம்பி மக்கள் ஓட்டு போடுவார்களா? இது பேசவேண்டிய விஷயமே இல்லை” என்று ஜோதிமணி தெரிவித்தார்.