நெல்லை நாடார் மக்கள் சக்தி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளரும், எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கு வலது கரமாக இருந்ததாக கூறப்படும் ஹரி நாடாரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

பாராளுமன்றத்தில் அதிமுக தலைமைக்கு எதிராக புகார் கூறிய சசிகலா புஷ்பாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியது அதிமுக கட்சி தலைமை. இதனை அடுத்து எம்.பி. சசிகலா எம்.பி. மீது பல்வேறு புகார்கள் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டன.

சசிகலா புஷ்பா வீட்டில் வேலை செய்த இளம் பெண்கள், தங்களுக்கு பாலியல் தொல்லை தருவதாகவும், டார்ச்சரை அனுபவித்து வருவதாகவும் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
அது மட்டுமல்லாமல் சசிகலா புஷ்பா மீது பல்வேறு புகார்கள் காவல் நிலையத்தில் கூறப்பட்டு வந்தது. இளம் பெண்கள் பானுமதி, ஜான்சிராணி சார்பில் வழக்கறிஞர் சுகந்தி ஜேசன் ஆஜராகி வருகிறார். வழக்கறிஞர் சுகந்தி ஜேசன் வீடு, சில மர்ம நபர்களால் தாக்குதலுக்கு ஆளானது.
இந்த நிலையில், எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கு மிகவும் வேண்டப்பட்டவராக கூறப்படுபவர் ஹரி நாடார். நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள யானைக்குடியை சேர்ந்தவரான ஹரிநாடார், நாடார் மக்கள் சக்தி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா குறித்து கடந்த சில நாட்களாக எம்.பி. சசிகலா புஷ்பா பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார். சசிகலா புஷ்பாவின் இந்த பேச்சில் கலக்கமடைந்த அவரது ஆதரவாளர்கள் தலைதெறிக்க ஓடிவிட்டனர். சசிகலா புஷ்பாவின் உறவினர்கள், நண்பர்கள், வேலைக்காரர்கள் என பல்வேறு தரப்பினர் அவரைவிட்டு விலகிச் சென்றுள்ளனர்.

சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாக, வைகுண்ட ராஜன் உள்ளிட்ட சிலர் உள்ளதாக கூறப்பட்டாலும், வெள்ளை ஜிப்பாவுடன், ஹிப்பி தலையுடன் வலம் வரும் ஹரி நாடார் தான் முக்கிய ஆதரவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சசிகலா புஷ்பாவுக்கு எதிராக புகார் கூறிய இளம் பெண்களுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் சுகந்தி ஜேசன் வீடு தாக்கப்பட்டதில் ஹரி நாடார் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஹரி நாடாரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
