நெல்லை கண்ணன் மீது பாஜகவினர் அளித்த புகாரின்பேரில் அவர் மீது காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட நெல்லை கண்ணன், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்குப் பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல், நெல்லை கண்ணனைக் கைது செய்யவேண்டும் என்று ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வலியுறுத்திவருகிறார்கள்.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷாவை விமர்சித்து பேசிய நெல்லை கண்ணனை கைது செய்யாவிட்டால் நாளை மாலை மெரினா கடற்கரையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நெல்லையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நடந்த எதிர்ப்புக் கூட்டத்தில் நெல்லை கண்ணன் பங்கேற்று பேசினார். அப்போது, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மிகக் கடுமையாக விமர்சித்து பேசிய நெல்லை கண்ணன், “அவுங்கள் சோலியை முடிச்சுடுவீங்க’ என்றும் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. நெல்லை கண்ணன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் பாஜகவினர், அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

