மீண்டும் வகையாக சிக்கும் ஹெச்.ராஜா! விவசாயி அய்யாக்கண்ணுவை தாக்கிய பெண்ணுக்கு வீர தமிழச்சி விருது தரணுமாம்...
விவசாயிகள் சங்க தலைவா் அய்யாக் கண்ணுவை தாக்கிய பெண்ணுக்கு வீர தமிழச்சி விருது கொடுப்போம் என்று பா.ஜ.க. தேசிய செயலாளா் ஹெச்.ராஜா மீண்டும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு குழு தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் மரபணு மாற்றப்பட்ட விதைகளைக் கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்யக்கோரி விழிப்புணர்வு நடைபயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருச்செந்தூர் வந்த அயாக்கண்ணு மற்றும் அவர் தலைமையிலான விவசாயிகள், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று வழிப்பட்டனர். அதன் பின்பு கோவில் வளாகத்தில் இருந்த பக்தர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
அப்போது அங்கிருந்த தூத்துக்குடி மாவட்ட பாஜக மகளிரணி பொது செயலாளர் நெல்லையம்மாள், துண்டு பிரசுரம் கொடுப்பதை தடுத்து நிறுத்தினார். இதனைத் தொடா்ந்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சற்றும் எதிர்பாராத விதமாக திடீரென்று அய்யாக்கண்ணுவை நெல்லையம்மாள் கன்னத்தில் அறைந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மற்ற விவசாயிகள் நெல்லையம்மாளை தாக்க முயற்சித்தனர்.
இதைத்தொடர்ந்து, தன்னை விவசாயிகள் தாக்கிவிட்டதாக கூறி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அட்மிட் ஆனார் நெல்லையம்மாள்.
இது தொடா்பாக பா.ஜ.க. தேசிய செயலாளா் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். அவா் வெளியிட்ட டுவிட்டா் பதிவில், திருச்செந்தூரில் கோவில் வளாகத்தில் பாரதப் பிரதமரை விமரிசித்து நோட்டீஸ் கொடுக்க அனுமதித்த கோவில் JC ஐ மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பணி இடை நீக்கம் செய்ய வேண்டும். மேலும் மகளிர் தினத்தன்று பாஜக மகளிர் நிர்வாகியை இழிவாக பேசி தாக்கிய அய்யாக்கண்னை காவல்துறை கைது செய்ய வேண்டும்
தனது மற்றொரு பதிவில், பொய்யும் புனைச்சுருட்டும் தன் ஆயுதமாகக் கொண்டு மலிவு விளம்பரம் தேடும் அய்யாக்கண்ணு நேற்றைய தினம் திருச்செந்தூரில் இழிந்த வார்த்தைகளை உபயோகித்து நெல்லையம்மாள் அவர்களை தாக்கியது கண்டிக்கத்தக்கது. அவருக்கு தக்க பதிலடி கொடுத்த நெல்லையம்மாள் அவர்களுக்கு வீர தமிழச்சி விருது வழங்குவோம் என பதிவிட்டுள்ளார்.