ஆர்.எஸ் பாரதி.. அடுத்து தயாநிதி மாறனா..? ஹெச்.ராஜா செம குஷி..!
திமுக அமைப்பு செயளாலர் ஆர்.எஸ்.பாரதி கைது. வரவேற்கத்தக்கது. அடுத்து தயாநிதிமாறன் in Waiting list?
திமுகவின் அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ் பாரதி தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவதூறாக பேசியதற்காக இன்று அதிகாலையில் கைதாகி இருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு வரதராஜனை நீதிபதி ஆக்கியிருந்தார். அதற்குப் பிறகு ஏழெட்டு ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் ஜட்ஜாக இருந்தார்கள் என்றால், அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்று கூறினார். அவரது இந்த பேச்சு பலத்த சர்ச்சையை கிளப்பியது.
தலித் மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய ஆர்.எஸ். பாரதியை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகளும் புகார் மனுக்களும் கொடுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சென்னை ஆலந்தூரில் இருக்கும் அவரது இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சென்று கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். எனினும் கொரோனா உபகரணம் வாங்கியதில் நிகழந்த ஊழல் குறித்து தான் பேசியதாலேயே கைது செய்யப்பட்டிருப்பதாக ஆர்.எஸ் பாரதி விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நிலையில் ஆர்.எஸ்.பாரதியின் கைதுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதில், திமுக அமைப்பு செயளாலர் ஆர்.எஸ்.பாரதி கைது. வரவேற்கத்தக்கது. அடுத்து தயாநிதிமாறன் in Waiting list?. என்று பதிவிட்டுள்ளார். அண்மையில் தலைமை செயலாளரை சந்திக்கச் சென்ற திமுக எம்.பிக்கள் அவமானப்படுத்தப்பட்டதாக தயாநிதி மாறன் கூறினார். தங்களை மூன்றாம் தர மக்கள் போல நடத்தியதாகவும் நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? எனவும் அவர் சர்ச்சை கருத்துகளை தெரிவித்திருந்தார். தயாநிதி மாறனின் பேச்சும் பலத்த கண்டனங்களை பெற்று வரும் நிலையில் அதை குறிப்பிட்டே ஹெச்.ராஜா தயாநிதியின் கைதுக்காக காத்திருப்பதாக பதிவிட்டிருக்கிறார்.