H. Raja is betraying to tamilnadu

தமிழகத்தில் இருந்து கொண்டு தமிழகத்து தண்ணீர் குடித்து வளர்ந்து ஹெச். ராஜா தமிழகத்துக்கு துரோகம் இழைப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காவிரி விவகாரத்தில் இறுதித் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழகத்திற்கான தண்ணீரின் அளவைக் குறைத்தது. அதே நேரத்தில் காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக முடிவு செய்ய காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து கால அவகாசம் முடியும் வரையுமே மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் வரும் மே மாதம் 12 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அரசு நிறைவேற்றுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, கர்நாடக தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால்தான் தமிழகத்துக்கு காவிரி வரும் எனவும் பாஜக வெற்றி பெற தமிழக மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். 

இதையடுத்து நேற்றுடன் காலத்தவணை முடிவடைந்த நிலையில் இன்று காலை அடுத்தகட்ட முடிவு என்ன என்பதை அறிவிப்போம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். 

மேலும் தமிழகத்தில் இருந்து கொண்டு தமிழகத்து தண்ணீர் குடித்து வளர்ந்து ஹெச். ராஜா தமிழகத்துக்கு துரோகம் இழைப்பதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.