தலை தெறிக்க தப்பி ஓடிய எச்.ராஜா…. மன்னார்குடியில் இருந்து எஸ்கேப் …. இன்று கைது செய்யப்படுவாரா ?
உயர்நீதிமன்றம் குறித்து இழிவாக பேசியது தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உட்பட 8 பேரை கைது செய்ய 2 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மன்னார்குடியில் இருந்த எச்.ராஜா தற்போது அங்கிருந்து தப்பியோடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து எச்.ராஜா இன்று கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜகைவைச் சேர்ந்த தலைவர்கள் சட்டம், நீதிமன்றம், பொது மக்கள், பத்திரிக்கையாளர்கள் என யாரையும் மதிக்காமல் பேசுவது என்பது வாடிக்கையாகிவிட்டது.
ஆனால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதோ, நடவடிக்கை எடுப்பதோ என எந்த நடவடிக்கையையும் தமிழக அரசோ, போலீசோ எடுப்பதில்லை. பெண் பத்திரிக்கையாளர்களை கேவலமாக பேசிய பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் கடைசி வரை கைது செய்யப்படவுமில்லை, நடவடிக்கையும் எடுக்கப்படவுமில்லை.
இதே போல் எச்,ராஜா தனது முகப்புத்தகம், டுவிட்டர் போன்றவற்றில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை அடிக்கடி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மெய்யப்புரத்தில் நேற்று நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, சென்னை உயர் நீதிமன்றம் குறித்து அவர் கீழ்தரமாக பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது. மேலும் போலீசார் குறித்தும் எச்.ராஜா அவதூறாக பேசியிருந்தார்.
இதற்கிடையே, திருமயம் போலீசார் உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக எச். ராஜா உள்பட 8 பேர் மீது இன்று வழக்கு பதிவு செய்தனர். அவர்களின் மீது சட்டத்தை மதிக்காதது, இரு தரப்பினருக்கு இடையே மோதலை தூண்டுவது, நீதிமன்றத்தை பற்றி அவதூறாக பேசியது என 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், எச். ராஜா உள்பட 8 பேரை கைது செய்வதற்காக ஆய்வாளர் மனோகரன், பொன்னமராவதி, ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதையறிந்த எச்.ராஜா, மன்னார்குடியில் இருந்து தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று கைது செய்யப்படலாம் என தெரிகிறது.