H raja condemns Mk stalin

மக்கள் பிரச்சனைகளை பார்க்காமல் பிரதமர், அதிமுகவின் இரு அணிகளையும் சேர்ப்பதற்கான பஞ்சாயத்தில் ஈடுபட்டு வருகிறார் என மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா, ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என செய்தியளாளர்களிடம் கூறினார்.

இதுதொடர்பாக சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்தில் எச்.ராஜா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இன்று தமிழகத்தில் போராட்டம் நடத்தும் விவசாயிகள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அது சாத்தியம் ஆகாது.

காரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அதை பற்றி பேச கூடாது.

இதுதொடர்பான தீப்பை நீதிபதிகள் அறிவித்த பின்னர், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்படும். அதற்கான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்படும்.

அதிமுக 2 அணிகளாக செயல்படுகிறது. இதனால், சந்தோஷம் அடைந்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஆட்சி கலைந்துவிடும். திமுக ஆட்சி அமைக்கும் என எதிர் பார்த்தார். அது நடக்கவில்லை.

விரைவில் அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றாகும் நிலை உருவாகியுள்ளது. இதனால், அவர் விரக்தி அடைந்துவிட்டார். அந்த வயிற்று எரிச்சல் அவருக்கு அதிகமாகவே வந்துவிட்டது. ஆட்சி கவிழும், நாம் எப்படியாவது, ஆட்சியை பிடித்து உட்கார்ந்துவிடலாம் என திட்டமிட்டார். அவரது திட்டம் மண்ணோடு மண்ணாகிவிட்டது.

இதனால், அவருக்கு மேலும் புகைச்சல் அதிகமாகியுள்ளது. அதை வைத்து பிரதமர் மோடி, பஞ்சாயத்து செய்கிறார் என வரம்பு மீறி பேசுகிறார். அவரது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் இடையே மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.