சிபிஐ ரெய்டு... தமிழகத்திற்கு தலைகுனிவு... மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி.ராஜேந்திரன் வீடுகளில் சிபிஐ சோதனையால் தமிழகத்துக்கு தலைகுனிவு என மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி.ராஜேந்திரன் வீடுகளில் சிபிஐ சோதனையால் தமிழகத்துக்கு தலைகுனிவு என மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் குட்கா ஊழல் தொடர்பாக நடைபெறும் ரெய்டு வரவேற்கத்தக்கதுதான். இருப்பினும், அமைச்சர், காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் நடைபெறும் சிபிஐ சோதனையால், தமிழகத்திற்கே தலைகுனிவு ஏற்பட்டுள்ளது என்றார். அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி.ராஜேந்திரன், ஜார்ஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
சட்ட அமைப்புகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்களை சரித்திரம் மன்னிக்காது. மேலும் அமைச்சர் விஜயபாஸ்கர், ஜார்ஜ், டிஜிபி ராஜேந்திரன் வீட்டில் சிபிஐ சோதனை வரவேற்கத்தக்கது. குட்கா ஊழல் தொடர்பாக டி.ஜி.பி.ராஜேந்திரன், விஜயபாஸ்கர் வீடுகள் உள்பட 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
டி.ஜி.பி. பதவியில் தொடரக்கூடாது
குட்கா ஊழல் தொடர்பாக ரெய்டுக்கு ஆளான டி.ஜி.பி.ராஜேந்திரன் பதவியில் தொடரக்கூடாது என ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் குட்கா ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான விஜயபாஸ்கரும் பதவி விலக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். உடனே டி.ஜி.பி.ராஜேந்திரனும், விஜயபாஸ்கரும் ராஜினாமா செய்ய மறுத்தால் 2 பேரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.