குட்கா விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு
குட்கா வழக்கு விசாரணை தொடர்பாக திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் வணிக வளாகங்கள், திரையரங்குகள், மக்கள் கூடும் இடங்களுக்கு அருகில் குட்கா தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆட்சியாளர்கள் மற்றும் காவல் துறையினரின் ஆதரவின்றி போதைப் பொருட்களை விற்பனை செய்வது சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.
குட்கா உரிமையாளர்களிடம் இருந்து சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் குட்கா விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. குட்கா ஊழலை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
அந்த மனுவில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு கருத்தைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாத என்று கூறப்பட்டுள்ளது.