gujrat may get heavy rain because of election period tweet by rahul gandhi

இது உண்மையில் மழைக்காலம். ஆனால், குஜராத்துக்கு இது தேர்தல் காலம். பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அவரை கலாய்க்கும் விதமாக தனது டிவிட்டர் பதிவில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். ஹிந்தியில் வெளியிட்டுள்ள அந்த டிவிட்டர் பதிவில், “வானிலை அறிக்கை: தேர்தல் வருவதை முன்னிட்டு குஜராத்தில் இன்று கனமழை பெய்யும்” என்று கிண்டலடித்துள்ளார். 

குஜராத்தில் தற்போது தேர்தல் மேகங்கள் மூடத் தொடங்கியுள்ளன. அண்மையில் குஜராத்தில் பரவலாக பயணம் மேற்கொண்டு பிரசாரத்தினை தொடர்ந்து நடத்தி வந்தார் ராகுல் காந்தி.

முன்னதாக, இமாச்சலப் பிரதேசம், குஜராத் ஆகிய இரு மாநிலங்களுக்கும் சேர்த்து தேர்தல் தேதி அறிவிக்கப்படக் கூடும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இமாசலப் பிரதேசத்துக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. குஜராத் தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. 

இதனிடையே, குஜராத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் குஜராத் மக்களுக்கு எந்த வித நலத் திட்டத்தையும் பாஜக.,வால் அறிவிக்க முடியாது என்ற சூழ்நிலை ஏற்படும். அதனாலேயே, குஜராத் மற்றும் இமாசலப் பிரதேசத்தில் அடுத்தடுத்து தேர்தல்களை அறிவிக்க கூடாது என்றும், ஒரே நேரத்தில் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்றும், காங்கிரஸ் கூறியிருந்தது. ஆனால், அவ்வாறு அறிவிக்க முடியாதபடி, தேர்தல் ஆணையத்துக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்துள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டியது. 

இதனை மனத்தில் கொண்டே, குஜராத் மக்களுக்கு திட்டங்கள் எனும் பெயரில் கன மழையாக கொட்டப் போகிறது என்ற கருத்தில் ராகுல் கிண்டலடித்துள்ளார். முன்னதாக வேறொரு பதிவில், குஜராத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளதால், மாநிலத்திற்கு ரூ.12,500 கோடி அளவில் திட்டங்கள் வரவுள்ளதாகக் கூறியிருந்தார்.