உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி  தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, கர்நாடகாவில் கம்பளா உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த அந்தந்த மாநில அரசுகள் சிறப்பு சட்டத்தை கொண்டு வந்தன. இந்த சட்டங்களுக்கு எதிராகவும், விலங்குகளை மையமாகக் கொண்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கு நீதிபதிகள் கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணை நடைபெற்று இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டு கலாச்சாரத்தின் ஒரு பகுதி. 100 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் திருப்தியாக உள்ளது. தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டத்தின் மூலம் காளைகள் துன்புறுத்தப்படுவது பெருமளவு குறைந்துள்ளது என்று கூறிய நீதிபதிகள் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டம் செல்லும் என தீர்ப்பு வழங்கினர். இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது!

Scroll to load tweet…

தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை நாம் கட்டி வருகிறோம். வரும் சனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.