டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் தகுதி நீக்கம்…. அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் அதிரடி அறிவிப்பு…
டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் தகுதி நீக்கம்…. அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் அதிரடி அறிவிப்பு…
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், அவரை மாற்ற வேண்டும் என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ள நிலையில் அந்த 19 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவர்கள் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக கடிதம் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என கவர்னருக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அரசு கொறடா தாமரை ராஜேந்திரன், தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் 19 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்தார்.
கொறடாவுக்கு தெரியாமல் அந்த 19 எம்எல்ஏக்களும் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், இது சட்டப்படி குற்றம் என்றும் தெரிவித்தார். அரசுக்கு எதிராக செயல்படும் தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் ராஜேந்திரன் தெரிவித்தார்.