தமிழக அரசின் செய்திப்படங்கள், திரையரங்குகளில் முறையாக காட்டப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கு கடம்பூர் ராஜூ அறிவுறுத்தியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

செய்தி - விளம்பரத் துறையின் செயற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அப்போது அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியதாவது:-

அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்களை திரைப்படப் பிரிவின் மூலம் செய்திப்படங்களாக தயாரித்து வெளியிட வேண்டும். அரசின் திட்டங்கள், நிகழ்ச்சிகளை மக்களுக்கு உடனுக்குடன் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

செய்திகளை குறித்த நேரத்தில் பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு அளிக்க வேண்டும். செய்தியாளர்களுக்கான பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம், பத்திரிகையாளர் குடும்ப ஓய்வூதியம், குடும்ப நிதியுதவி ஆகியவை விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திரையரங்குகளில் அரசு செய்திப் படங்கள் முறையாக காட்டப்படுகிறதா என்பதை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். நினைவகங்களை முறையாக பராமரிக்க வேண்டும். தமிழரசு இதழ்களை பொதுமக்கள் விரும்பி படிக்கும் வகையில் தயாரித்து வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இந்தக் கூட்டத்தில், செய்தித்துறை செயலர், மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.