நிர்மலாவை நான் பார்த்ததில்லை! ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
மாணவிகளை தவறாக நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் நிர்மலா தேவியின் முகத்தை இதுவரை நான் பார்த்ததில்லை என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார்
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளைத் தவறானச் செயலுக்கு அழைப்பது தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பேராசிரியை நேற்றிரவு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக சார்பிலும் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விசாரணைக் குழு, போலீஸார் விசாரணை என நடந்து வரும் நிலையில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என ஆளுநர் பன்வாரிலால் உத்தரவிட்டுள்ளார். மேலும், குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது எனவும் ஆளுநர் கூறியுள்ளார்.
இதனிடையே இந்த விவகாரத்தில் பல்வேறு வி.ஐ.பி-க்களுக்குத் தொடர்புள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், ஆளுநருக்குத் தொடர்பிருப்பதாக மார்க்ஸிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியது. இது குறித்து ஆளுநர் தரப்பில் விளக்கம் ஏதும் தரப்படவில்லை. இந்த நிலையில் சென்னை ஆளுநர் மாளிகையுல் இன்று 6 மணியளவில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பழட செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து இன்று மாலை 6 மணியளவில் ஆளுநர் புரோகித், செய்தியாளர் சந்தித்து வருகிறார். அப்போது, தமிழக ஆளுநராக பொறுப்பேற்று 6 மாதங்களை நிறைவு செய்துள்ளேன் என்றார்.
பேராசிரியை நிர்மலா தேவி மீதான குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானதுதான். இந்த சம்பவம் கண்டனத்துக்குரியது என்றார். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றார். இந்த விவகாரம் குறித்து ஒரு நபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் ஒரு மாதம் கழித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நிர்மலா தேவி விவகாரத்தில் என்னைக் கேட்காமல் பல்கலைக்கழகம் 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்பது குறித்தும் விசாரிக்கப்படும் என்றார். பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் இந்த விவகாரம் குறித்து தெரிவிக்கப்படவில்லை. இனிமேல் அத்தகைய செயல்கள் நடக்காதபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். விசாரணை ஆணையர் சந்தானம் விரிவாக விசாரணை மேற்கொண்டு ஒரு வாரத்தில் விசாரணை முடிந்து சந்தானம் அறிக்கை அளிப்பார் என்றார். விசாரணை அறிக்கை கிடைத்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நிர்மலா தேவியின் முகத்தை இதுவரை நான் பார்த்ததில்லை. எனக்கு 78 வயதாகிறது. கொள்ளு பேரன் பேத்திகள் உள்ளனர். அந்த ஆடியோவில் என்னைக் குறிப்பிட்டு குற்றம் சாட்டப்படவில்லை. அதில் தாத்தா என்றுதான் நிர்மலா கூறியுள்ளார். இதுபோல் என் மீது யாரும் தவறான குற்றச்சாட்டு கூற முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு எந்த அவசியமும் இல்லை. பல்கலைக்கழக செயல்படுகளில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருகிறேன் என்றார்.