governor denied to attend jayalalitha photo inaugural function
அனைத்து அரசு விழாவுக்கும் செல்லும் மற்றும் மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தும் ஆளுநர், சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் உருவப்பட திறப்பு விழாவிற்கு வரவில்லை.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்று வரும் 16ம் தேதியுடன் ஓராண்டாகிறது. அன்றைய தினத்தில்தான் ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனால் அவசரகதியில் இன்றே படம் திறக்கப்பட்டுவிட்டது.

ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இந்த விழாவிற்கு வர விருப்பமில்லை என்பதை பிரதமர் மோடி ஓபனாகவே தெரிவித்துவிட்டாராம். ஆளுநரை அழைத்தால் அவரும் வர மறுத்துவிட்டார். பெரும்பான்மை இல்லாமலேயே பழனிசாமி அரசு நீடிப்பதற்கு மத்திய பாஜக அரசு தான் காரணம் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதே விமர்சனத்தைத்தான் எதிர்க்கட்சிகளும் முன்வைக்கின்றன.
அப்படி பழனிசாமி அரசுக்கு ஆதரவாக இருந்தால், பிரதமர் இந்த விழாவிற்கு வந்திருக்க வேண்டும் அல்லவா? ஆனால் வரவில்லை. அதற்கு காரணம், முன்புபோல் இந்த அரசை டெல்லியும் விரும்பவில்லை என்பதுதானாம். ஆட்சியாளர்கள் மீதான ஊழல் புகார்களை ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதனால்தான், இந்த விழாவிற்கு வந்தால், ஊழல் ஆட்சிக்கு ஆதரவு அளிப்பதாக குற்றச்சாட்டுகள் எழும் என்பதால் பிரதமர் மறுத்துவிட்டாராம்.

அரசு விழா அனைத்திற்கும் வருகைதரும் ஆளுநர், இந்த விழாவிற்கு வரவில்லை. ஆளுநருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு, எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு வரட்டும்; பிறகு பார்த்துக்கொள்ளலாம் என தெரிவித்துவிட்டாராம். சட்டமன்றத்தை கூட்டுவதற்கும் ஆளுநர் அதே பதிலை தான் தெரிவித்தார் எனவும் அதனால் ஆட்சியாளர்கள் கலக்கத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
