A.K ராஜன் அறிக்கையை டாராக்கிய ஆளுநர்.. ஸ்டாலின் அரசை இன்னும் என்னென்ன செய்யபோறாரோ RN ரவி.??
நீட் தேர்வு வந்த பிறகு ஏழை எளிய மாணவர்கள் பொருளாதார ரீதியாக சுரண்டப்படுவது தடுக்கப்பட்டிருக்கிறது என்றும், நீட் தேர்வுக்கு பிறகு அதிக அளவில் ஏழை எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாகவும் ஆளுநர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.
நீட் விலக்கு அறிக்கை காமாலை கண் கொண்டவர்களால் தயாரிக்கப்பட்டது போலிருக்கிறது என ஆளுநர் ஆர்.என் ரவி, ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே ராஜன் குழுவை விமர்சித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் விளக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கான காரணம் குறித்து ஆளுநர் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் இவ்வாறு விமர்சிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே அனைத்துக் கட்சிகளின் பொதுவாக கோரிக்கையாக உள்ளது. இதில் பாஜக மட்டும் நீட் வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஸ்டாலின் தலைமையில் தமிழக சட்டமன்றத்தில் நீட் விலக்கு கோரி மசோதா நிறைவேற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. 143 நாட்களுக்கும் மேலாக ஆளுநர்அதன் மீது நடவடிக்கையும் இல்லாமல் காலம் தாழ்த்திவந்த நிலையில், தமிழக அரசு கொடுத்த நிர்பந்தத்தின் காரணமாக அந்த மசோதாவை மீண்டும் மாநில அரசுக்கே திருப்பி அனுப்பி உள்ளார் ஆளுநர். இது தமிழக அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிதற்கான காரணம் என்ன என்பதற்கான முழு விவரம் வெளியாகாமல் இருந்தது. அதே நேரத்தில் அதற்கான காரணத்தை ஆளுநர் விளக்கமாக சபாநாயகருக்கு அனுப்பி இருந்தார். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுனர் அனுப்பிய அறிக்கையின் முழு விவரத்தை வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.
இந்நிலையில்தான் ஆளுநர் ஆர்.என் ரவி நீட் விலக்கு மசோதாவை மறுபரிசீலனை செய்ய சொல்லி சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தின் தகவல்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் தான் நீட் விலக்கு தொடர்பாக ஆய்வு செய்ய தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே ராஜன் குழுவை ஆளுநர் கடுமையாக விமர்சித்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட காரணமாக உள்ள ஏ.கே ராஜன் கமிட்டியின் அறிக்கை காமாலை கண் கொண்டவர்கள் தயாரித்தது போல உள்ளது என சபாநாயகருக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் ஆளுநர் ஆர்.என் ரவி குறிப்பிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த அறிக்கையில் எந்த இடத்திலும் நீதியரசர் ஏ.கே ராஜனின் பெயர் இடம்பெறவில்லை. அறிக்கை தயாரித்த குழு என்றே அதில் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். சமூகத்திலும், நீதித்துறையிலும் மதிப்புமிக்க நீதிபதியாக இருந்து பல்வேறு குழுக்களுக்கு தலைமை வகித்துள்ள ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே ராஜனையும், அவர் சார்ந்த குழுவினரையும் ஆளுநர் காமாலைக் கண் கொண்டவர்கள் என விமர்சித்திருப்பதுடன், அதை ஒரு மாநில சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு அனுப்பியிருப்பது நீதியரசரை மட்டுமல்ல, தமிழ்நாடு அரசையும் அவமதிக்கும் செயல் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இதேபோல் இந்த நீட் விலக்கு மசோதாவை ஏன் திருப்பி அனுப்புகிறேன் என்பதற்கான காரணங்களையும் ஆளுனர் அடுக்கியுள்ளார். அதாவது நீட் மசோதாவிற்கு ஆதாரமாக உள்ள ஆய்வுக் குழுவின் அறிக்கை ஆதாரங்களை அடிப்படையாக கொண்டதாக இல்லாமல், அது அனுமானங்களை அடிப்படையாக கொண்டிருக்கிறது, அதேபோல் நீட் தேர்வு குறித்து அந்த அறிக்கையில் பொத்தாம் பொதுவான கருத்துக்களே அதிகம் இடம் பெற்றுள்ளன. அதேபோல் நீட் தேர்வின் மூலம் தகுதியற்றவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என அந்த அறிக்கை பொதுவாக குறிப்பிட்டுள்ளதை ஏற்க முடியாது. நீட் தேர்வில் முக்கியத்துவத்தை உணராமல் சமூக நீதிக்கு எதிரானது என்ற வார்த்தையை மட்டும் வைத்து அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக செல்வாக்குள்ள மாணவர்களுக்கு மட்டுமே நீட்தேர்வு உகந்தது என்பது போல அறிக்கை அமைந்துள்ளது. இந்த காரணங்கள் ஏற்கத் தக்கதாக இல்லை. அதேபோல் இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற படங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாக நீட் தேர்வு உள்ளது என்றும், அனைத்து பாட திட்டங்களையும் கொண்டு அறிவை சோதிக்க நீட்தேர்வு தவறியிருக்கிறது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது, எனவே அதனை தான் ஏற்க மறுப்பதாகவும் ஆளுநர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் மருத்துவ படிப்பு என்பது இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் அறிவைக் கொண்ட விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். ஆனால் அதை ஒரு குற்றமாக கூறுவதை ஏற்க முடியாது எனவும், ஆளுநர் ரவி சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. நீட் தேர்வு வந்த பிறகு ஏழை எளிய மாணவர்கள் பொருளாதார ரீதியாக சுரண்டப்படுவது தடுக்கப்பட்டிருக்கிறது என்றும், நீட் தேர்வுக்கு பிறகு அதிக அளவில் ஏழை எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாகவும் ஆளுநர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. அதேபோல் நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்றும், பொருளாதாரத்தில் வசதிபடைத்த மாணவர்களுக்கு மட்டுமே நீட்தேர்வு ஏற்றது என்றும், அது ஏழை எளிய மாணவர்களுக்கு ஏற்றது அல்ல என்ற ஏ.கே ராஜன் குழு அறிக்கை உண்மைக்குப் புறம்பானது என்றும் ஆளுநர் ரவி அதில் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வு சமூகநீதிக்கு ஒருபோதும் எதிரானது அல்ல என்பதை அழுத்தம் திருத்தமாக ஆளுநர் சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நீட் தேர்வு என்பது முழுக்க முழுக்க தேச நலனுக்காக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது என உச்சநீதிமன்றமே இதில் கருத்து சொல்லி இருப்பதையும் தனது அறிக்கையில் அவர் மேற்கோள் காட்டிள்ளதாகவும், அதேபோல் நீட் தேர்வு விலக்கு மசோதா என்பது மாணவர்களின் நலனுக்கு எதிராக இருக்கிறது என்றும், இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டி இருப்பதால் அரசியலமைப்பு சட்டம் 200 இன் படி இதனை மறுபரிசீலனை செய்ய திருப்பி அனுப்புவதாகவும் ஆளுநர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னிலையில் ஆளுநர் அனுப்பிய கடிதத்தை சட்டமன்ற சபாநாயகர் அப்பாவுக்கு இன்று சட்டமன்றத்தில் வாசித்து காண்பித்துள்ளார். அதில் மேற்கண்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதே நேரத்தில் எனக்கு அனுப்பிய ஒரு கடிதத்தை பொதுவெளியில் ஆளுநர் தெரியப்படுத்தியது சரிதானா? முறைதானா என சபாநாயகர் அப்பாவுக்கு கேள்வி எழுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.