மத்திய அரசின் முக்கியத் திட்டங்களை பிரபலப்படுத்தும் வகையில் திறம்பட பணியாற்றும் அதிகாரிகளுக்கு விருது வழங்கி கவுரவிக்க பிரதமர் மோடி திட்டமிட்டு இருக்கிறார்.
5 திட்டங்கள்
இதற்காக மத்திய அரசால் 5 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
பிரதமரின் வேளாண் உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்கேஎஸ்ஒய்), பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் (பிஎம்எப்பிஒய்), தீன தயாள் உபாத்யாய கிராம மின்னொளித் திட்டம், மின்மய தேசிய வேளாண்சந்தை, எழுந்திடு இந்தியா -தொடங்கிடு இந்தியா ஆகியவையே அந்த 5 திட்டங்கள் ஆகும்.
பிரதமர் விருது
இந்த 5 திட்டங்களையும் பிரபலப்படுத்தும் வகையில் திறம்பட பணி புரியும் அதிகாரிகளுக்கு ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதியன்று பொது பணியாளர் தினத்தில் (சிவில் சர்வீசஸ் டே) பொது நிர்வாகத்தில் திறம்பட பணியாற்றியதற்கான பிரதமர் விருது அளிக்கப்படவுள்ளது.
முன்னுரிமைத் திட்டம் அடிப்படையில் 15 விருதுகளும், புதியன கண்டுபிடித்தல் அடிப்படையில் 2 விருதுகளும் வழங்கப்படவுள்ளன.
2017-ஆம் ஆண்டு பிரதமர் விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு தனி இணையதள முகவரியை மத்தியப் பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் குறைதீர்ப்பு துறை தொடங்கியது.
600 மாவட்டங்களில்
கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து இந்த விருதுகளுக்கு 1,515 விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இதில் 830 விண்ணப்பங்கள், மத்திய அல்லது மாநில அரசு, மாவட்ட நிர்வாகம் தரப்பில் இருந்து அனுப்பப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கள் உயர்நிலை அதிகாரிகளால் 3 கட்டமாக பரிசீலிக்கப்பட்டு, விருது பெறுவோர் இறுதி செய்யப்படவுள்ளனர்.
மேற்கண்ட தகவல் மத்தியப் பணியாளர் நல அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
