ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க குழு அமைத்து அரசாணை.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.
ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்காகவும், அதனை கண்காணிக்க குழு அமைத்ததற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்காகவும், அதனை கண்காணிக்க குழு அமைத்ததற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தேசிய அளவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தேவையை கருத்தில் கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சியினரும் ஒருமித்த கருத்தை தெரிவித்ததன் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தீர்மானம் நிறைவேற்றி உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலை ஆக்ஸிஜன் உற்பத்தியை கண்காணிக்க குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சார் ஆட்சியர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், ஆக்ஸிஜன் தொழிற்சாலை குறித்த தொழில்நுட்ப அறிவு சார்ந்த அரசு அதிகாரி என 7 பேர் கொண்ட குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் இந்த தொழிற்சாலை மருத்துவ தேவைக்கான ஆக்ஸிஜன் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வேறு எந்த நோக்கத்திற்காகவும் இதனை இயக்கப்படக்கூடாது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தொழிற்சாலையில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளவும், ஆலையின் நிலை தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்கவும் கண்காணிப்பு குழுவுக்கு அதிகாரம் இருப்பதாகவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.