அரசு ஊழியர்கள் வாரத்தில் 2 நாள் கட்டாயம் இதனை செய்ய வேண்டும்... மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!
கைவினைஞர்களுக்குப் பயன்படும் வகையிலும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும் புனரமைத்திடவும் அறிவுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறையின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய மு.க.ஸ்டாலி, '’அரசு ஊழியர்கள் வாரம் இரண்டு நாட்கள் கைத்தறி ஆடைகள் அணியவேண்டும். தமிழ்நாட்டின் நெசவிற்கு ஒரு வணிகப் பெயரை (Branding) உருவாக்க வேண்டும். கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய அணுகுமுறையாக, பாரம்பரியத்தை இளையதலைமுறைக்குக் கொண்டுசேர்ப்பது, அனைத்து வயதினருக்கும் ஏற்ற கைத்தறி ஆடைகளை வடிவமைப்பது, ஒருங்கிணைந்த விற்பனை வளாகங்களை உருவாக்குவது, கைத்தறியை உயர் வருவாய் பிரிவினரிடம் கொண்டு செல்வதன் மூலம் நெசவாளர்களின் வருமானத்தை உயர்த்துவது, அரசு ஊழியர்கள் வாரம் இரண்டு நாட்கள் கைத்தறி ஆடைகளை உடுத்த அறிவுறுத்துவது, தமிழ்நாட்டின் நெசவிற்கு ஒரு வணிகப் பெயரை உருவாக்குவது போன்ற அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மாமல்லபுரத்தில், கைவினைஞர்கள் சுற்றுலாக் கிராமம் அமைத்திட கைவினைஞர்களின் குடியிருப்புகளை அழகுபடுத்துதல், தொழிற்கூடங்களை மேம்படுத்துதல் மற்றும் நிரந்தர விளம்பரப் பதாகைகள் அமைத்தல் போன்ற பணிகளை விரைந்து முடித்து அவற்றைக் கைவினைஞர்களின் பயன்பாட்டிற்கு உதவும் வகையிலும் மற்றும் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் அமைக்கவும், மாமல்லபுரம் மற்றும் கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள கண்காட்சித் திடல்களை, கைவினைஞர்களுக்குப் பயன்படும் வகையிலும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும் புனரமைத்திடவும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிறுவனம் 2023ஆம் ஆண்டு 50ஆம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் விதமாகப் பொன்விழாவினைக் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் சிறந்த கைவினைஞர்களைக் கௌரவப்படுத்திடவும், கைவினைஞர்களுக்கு நலம் சார்ந்த சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்திடவும் வேண்டும்’’என்று அவர் தெரிவித்தார்.