அரசு டாஸ்மாக் கடைகளை மூடினால்.. திமுகவினர் தானாக மது ஆலைகளை மூடுவார்கள்... டி.கே.எஸ். இளங்கோவன் அதிரடி..!
அரசு சரியாக செய்து இருந்தால் மக்கள் எங்களை ஏன் அணுகுகிறார்கள்? என திமுகவின் செய்தித்தொடர்பாளரும், எம்.பி.யுமான டி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு சரியாக செய்து இருந்தால் மக்கள் எங்களை ஏன் அணுகுகிறார்கள்? என திமுகவின் செய்தித்தொடர்பாளரும், எம்.பி.யுமான டி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் தமிழகத்தில் முதல்வர் எடுத்து வரும் நடவடிக்கைகளால் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்தார். மேலும், ஏப்ரல், மே, ஜூன் மாதத்திற்குக் கூடுதலாக அரிசி வழங்கப்பட்டுள்ளதாகவும், மக்களுக்கு கூடுதல் அரிசி வழங்க ரூபாய் 438 கோடி நிதி ஒதுக்கி மத்திய தொகுப்பில் இருந்து அரிசி வாங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்பதற்காக 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தின் மூலம் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை மு.க.ஸ்டாலின் கூறி வருவதாக அவர் குற்றம்சாட்டினார். அரசின் மீது குறைசொல்ல வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் பொறுப்பில்லாமல் செயல்படக்கூடாது என்று அவர் கூறினார்.
இதனையடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுகவின் செய்தித்தொடர்பாளரும், எம்.பி.யுமான டி.கே.எஸ். இளங்கோவன் அமைச்சர் காமராஜ் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார். பொதுமுடக்கம் தொடங்கிய காலத்தில் அதிமுக அரசு ஒன்றும் செய்யவில்லை. திமுகவிடம் மக்கள் அளித்த மனுக்களை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் குழு, தலைமை செயலாளரிடம் அளித்தது. பொது முடக்கத்தால் பசி, பட்டினி வராமல் இருக்க செய்ய வேண்டியது பற்றி பேசவே அனைத்துக் கட்சி கூட்டத்தை திமுக கோரியது.
மக்களின் குறைகளை அரசுக்கு தெரிவிப்பதில் அரசியல் செய்யும் நோக்கம் திமுகவுக்கு இல்லை. மக்களின் குறைகளை அரசுக்கு தெரிவித்த திமுகவின் முயற்சியை வரவேற்றிருக்க வேண்டும். எல்லாவற்றையும் செய்துவிட்டோம் என அமைச்சர் பேசுகிறார். அப்படி எனில் ஒரு லட்சம் மனுக்கள் வந்தது எப்படி? சில இடங்களில் அரசு உதவி செய்யாததால் திமுகவை மக்கள் அணுகுகிறார்கள். உணவு, உடை அளித்ததாக அரசு கூறுகிறது, உடை தர வேண்டிய நேரம் இதுவல்ல; உணவு தர வேண்டிய நேரம் இது என்று கூறினார்.
மேலும், பேசிய அவர் அரசு ஒன்றுமே செய்யவில்லை எனக் கூறவில்லை, முறையாக செய்யவில்லை என்றே சொல்கிறோம். அரசு நடத்தும் அம்மா உணவகத்தில் யாருடைய பணத்தில் அதிமுகவினர் உணவு தருவார்கள்? அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க எல்லா கட்சிகளையும் நிதியுதவி தர ஏன் அனுமதிக்கவில்லை? பொதுமுடக்கம் தொடங்கியதில் இருந்தே அதிமுக அரசுதான் அரசியல் செய்து வருகிறது. அரசு டாஸ்மாக் கடைகளை மூடினால், திமுகவினர் தானாக மது ஆலைகளை மூடப்போகிறார்கள் என்று டி.கே.எஸ். இளங்கோவன் ஆவேசமாக பேசியுள்ளார்.