governer rule in tamilnadu

தமிழகத்தில் நடைபெற்று வரும் அதிமுக அரசுக்கும் மத்திய பாஜக அரசும் சுமூகமான உறவு இருப்பதாக வெளியில் தெரிந்தாலும் இந்த அரசை எப்படியாவது வீழ்த்தி கவர்னர் ஆட்சியை கொண்டுவரும் முயற்சிகளில் மத்திய அரசு இறங்கியிருப்பதாகவும், அதன் ஒரு பகுதிதான் அதிமுக அமைச்சர்கள் லஞ்சம் பெற்றதாக சேகர் ரெட்டி டைரியில் இருந்த தகவலை லீக் பண்ணியது என அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்க்ள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஜெயலலிதா மறைந்த சில நாட்களுக்குள் மணல் மாபியா என அழைக்கப்படும் சேகர் ரெட்டி, முன்னார் தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் போன்றோர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இந்த சோனையின்போது, சேகர் ரெட்டியிடமிருந்து ஒரு முக்கியமான டைரி கைப்பற்றப்பட்டதாகவும், அதில் சேகர் ரெட்டி யார் யாருக்கு லஞ்சம் கொடுத்தார் என்ற விவரங்கள் அடங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் தொடர்ந்து பல மாதங்கள் இப்பிரச்சனை கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் திடீரென அந்த டைரியில் இருந்து ஒரு பக்கம் ஆங்கில செய்திச் சேனலில் நேற்று வெளியிடப்பட்டது.

அதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பண்ணன் ஆகிய 8 பேர்களின் பெயர்கள் மற்றும் அவர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரமும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் நடைபெறவுள்ள இந்த நேரத்தில் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் மத்திய அரசு ஓகே சொன்ன பிறகுதான் வருமான வரித் துறையில் இருந்து இந்த டைரி விவகாரம் லீக் செய்யப்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள். தமிழக அரசுக்கு ஆதரவாக இருப்பது போல மத்திய அரசு காட்டிக் கொண்டாலும், தமிழக அரசின் கட்டுப்பாட்டை அவர்களுக்குள் கொண்டு வர நினைக்கிறார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன..

தமிழக ஆளுநராக பொறுப்பேற்றக் கொண்ட பன்வாரிலால் புரோகித், கோவை, நெல்லை, கன்னியாகுமரி என ஆய்வு மேற்கொண்டு அதிர்வலைகளை உண்டாக்கினார்.

மாநில உரிமைகள் பறிபோகிறது என எதிர்கட்சிகள் கரடியாக கத்தினாலும், மத்திய அரசு அதை கண்டுகொள்ளவே இல்லை. அதே நேரத்தில் ஆளுங்கட்சி இவ்விஷயத்தில் அடக்கியே வாசித்தது.

இதைத் தொடர்ந்துதான் தமிழக அரசின் லகானை முழுக்க ஆளுநர் கையில் ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்..

ஏதாவது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து இபிஎஸ் ஆட்சியை சஸ்பெண்ட் செய்து முடிவுக்குக் கொண்டுவர முடியாது. அதனால்தான் ஒரு ஸ்ராங்கான காரணத்தை மத்திய அரசு தொடர்ந்து தேடி வருகிறது.

இப்ப இந்த சேகர் ரெட்டி விவகாரம் லட்டுபோல் கிடைத்துள்ளதால் இதை வைத்து காய் நகர்த்த பாஜக களமிறங்கியுள்ளதாகவே தெரிகிறது.

சேகர் ரெட்டி பிரச்சனை பெரிதானால் அதை வைத்து கவர்னர் ஆட்சியை அமல் படுத்திவிடலாம் என்பதுதான் தற்போதைய பாஜகவின் திட்டம். ஆமா இன்னும் எத்தனை நாளுக்குத்தான் அதிமுகவுக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பது?