தமிழகம் முழுக்க வாக்காளர்களுக்கு அவரவர் கூகுள் பே அல்லது போன்பே நம்பருக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக பல்வேறு இடங்களில் புகார்கள் எழுந்து இருக்கின்றது. 

தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 4ஆம் தேதி முடிவடைந்தது. தற்போது அனைத்து கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அரசாங்க தரப்பிலும் தேர்தல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக அனைத்து பகுதிகளிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஒருபுறம் தேர்தல் பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் தரப்பில் பணம் கொடுக்கும் பணிகள் தீவிரமாக துவங்கியுள்ளன. 

தேர்தலின் போது, ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம். ஆனால் நம் நாட்டில் உள்ள கட்சிகளோ கொடுப்பதை நிறுத்துவதும் இல்ல, மக்கள் வாங்காமல் இருப்பதும் இல்லை. காலத்திற்கேற்ப எல்லாம் மாறுவது போல, ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் மாறியிருக்கிறது. தமிழகம் முழுக்க வாக்காளர்களுக்கு அவரவர் கூகுள் பே அல்லது போன்பே நம்பருக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக பல்வேறு இடங்களில் புகார்கள் எழுந்து இருக்கின்றது.

உதாரணமாக வேட்பாளர்கள் முதன் முறையாக வாக்காளர்களை சந்திக்கும் போது சால்வை, துண்டு கொடுத்து ஒட்டு சேகரிக்கின்றனர். பின், வேட்பாளரின் பெயர், அவரின் மொபைல் எண், போன் பே, கூகுள் பே, வீட்டில் எத்தனை ஓட்டுகள் உள்ளது போன்ற விவரங்களை கேட்கின்றனர்.தேர்தல் நெருக்கத்தில் வாக்காளர்களிடம் போன் பே, கூகுள் பே போன்றவைகளில் பணம் அனுப்பி, பரிசு பொருட்கள் கொடுத்து ஓட்டு வாங்கி வெற்றி பெறலாம் என திட்டமிட்டுள்ளனர். 

ஒரு கட்சியில் வாக்காளர்களுக்கு எவ்வளவு பணம் தருகிறார்கள் என பார்த்து கூடுதலாக தர மற்ற வேட்பாளர்கள் தயாராகி வருகின்றனர். கவுன்சிலராக வெற்றி பெற்று சேர்மன் பதவியை கைப்பற்ற வேண்டும் என அனைத்து வேலைகளையும் கட்சி வேட்பாளர்கள் செய்கின்றனர். இப்படித்தான் நகரம்,மாநகரம் என விரிவு படுத்தி பக்காவாக பிளான் போட்டு செய்து வருகிறார்கள் தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள்.

‘டிஜிட்டல் இந்தியா’ ஒரு பக்கம் இப்படியிருக்க, வழக்கம் போல பழைய கான்செப்ட் படியும் வாக்காளர்களை செமயாக கவனிக்கின்றனர். நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் வேட்பாளர்கள் தங்களது தகுதிக்கு ஏற்ப வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கின்றனர். டிபன் பாக்ஸ், பாத்திரங்கள், அரிசிப்பை போன்றவற்றை விநியோகம் செய்து வருகின்றனர் என்றும் கூறுகின்றனர். 

வேட்பாளர்களிடம் இருந்தோ, பொதுமக்களிடம் இருந்தோ பணம், பரிசுப்பொருட்கள் பட்டுவாடா குறித்து, கட்டுப்பாட்டு அறைக்கு எவ்வித புகார்களும் வருவதில்லை. வாக்காளர்கள் தரப்பிலும் பெரும்பாலும் பணம், பரிசுப்பொருட்களை கேட்டு வாங்குவதால், இதுபற்றிய தகவல் கிடைக்காமல் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் அதிகாரிகள் உள்ளனர். எது எப்படியோ மொத்தத்தில் சந்தோஷத்தில் திக்கு முக்காடி வருகின்றனர் வாக்காளர்கள்.