சசிகலாவுக்கு ஆதரவாக ஓடிஓடி பேட்டி கொடுத்த கோகுல இந்திரா அதிரடி நீக்கம்! டிடிவியின் சாட்டை அடி!
அனைத்திந்திய அண்ணா ரிவிட முன்னேற்றக் கழக (அம்மா) துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் பொறுப்பில் இருந்து பலரை நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அணிகளாக பிளவடைந்த அதிமுகவில், சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டவர் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, சசிகலா அணியில் இருந்து கோகுல இந்திரா எடப்பாடி அணிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.
மறைந்த ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதும், கோயில்களுக்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபடுவதும், அவரின் மறைவுக்குப் பிறகு, சசிகலாவுக்காக செயல்பட்டும் வந்தார். இந்த நிலையில், அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து கோகுல இந்திரா நீக்கப்பட்டுள்ளார்.
டிடிவி தினகரன், கடந்த சில நாட்களாக, மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட சிலரை விடுவித்தும், அப்பதவிக்கு புதியவர்களை நியமித்தும் வருகிறார்.
டிடிவி தினகரன் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்த கோகுல இந்திரா விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்
கோகுல இந்திரா மட்டுமல்லாது, மேலும் சிலரை நீக்கியும், புதிய நியமனம் செய்தும் உள்ளார். அதிமுக இளைஞர் மற்றும் பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருந்து ப. குமார் நீக்கப்பட்டுள்ளார். மகளிர் அணி இணை செயலாளர் பொறுப்பில் இருந்து கீர்த்திகா முனியசாமி நீக்கப்பட்டுள்ளார். அதிமுக அம்மா பேரவை இணை செயலாளர் பொறுப்பில் இருந்து எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுக அம்மா அணி அமைப்பு செயலாளர் பதவிக்கு நடிகர் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராக கே.எஸ். கோனேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக ஜெயலலிதா பேரவை இணை செயலாளர்களாக மணிகண்ட ராஜா, ஜெயராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர்களாக ராமலிங்கம் ஜோதி, சங்கர், முருகனும், அதிமுக மகளிர் அணி இணை செயலாளராக வளர்மதி ஜெபராஜ்-ம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக தென்சென்னை வடக்கு மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளராக கே.சி. விஜய்-ம், நெல்லை, புறநகர் மாவட்ட அதிமுக இலக்கிய அணி தலைவராக ஆர்.எஸ்.கே. துரையும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கழக பொது செயலாளர், தியாக தலைவி மதிப்பிற்குரிய வி.கே. சசிகலா அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என்றும் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.