உயிர் போகும் வரை அதிமுகவில் தான் இருப்பேன் ! உருகிய கோகுல இந்திரா !!
முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா திமுக அல்லது பாஜவில் இணையப் போவதாக செளியான தகவலை மறுத்த அவர், என் உயிர் இருக்கும் வரை அதிமுகவில்தான் இருப்பேன் என உருக்கத்துடன் தெரிவித்தார்.
அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமாக இருந்தவர் கோகுல இந்திரா. அதிமுக மகளிர் அணிச்செயலாளர் , ராஜ்யசபா உறுப்பினர், அமைச்சர் என உச்சத்தில் கொடி கட்டிப் பறத்வர் கோகுல இந்திரா.
சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட கோகுல இந்திரா சென்னை அண்ணா நகரில் செட்டிலாகி அரசியல் செய்து வருகிறார். ராஜகண்ணப்பன் அதிமுகவில் இருந்து விலகி திமுகவுக்கு சென்ற போது யாதவ சமுதாய பிரதிநிதி கோட்டாவில் கோகுல இந்திராவை கட்சியில் வளர்த்துவிட்டார் ஜெயலலிதா.
இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு ஆக்டிவ் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் கோகுல இந்திரா , நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தனக்க சீட் கிடைக்கும் என மிகவும் எதிர்பார்த்தார்.ஆனால் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை.
இதன்பின்னர் தனக்கு மாநிலங்களவை சீட்டாவது கிடைக்கும் என காத்திருந்தார். ஆனால் ஓபிஎஸ், இபிஎஸ் என இருவருமே அவரைக் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து கடந்த ஒரு வாரகாலமாக அதிமுகவில் இருந்து கோகுல இந்திரா விலகுவதாக தகவல் உலா வருகிறது. அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக கூட கூறப்பட்டது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள கோகுல இந்திரா, தன் உடலில் உயிருள்ள வரை அதிமுகவில் தான் இருப்பேன் என்றும், வாட்ஸ் அப், பேஸ்புக், உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் யாரோ திட்டமிட்டு வதந்தி பரப்பி வருவதாகவும் கூறினார்.
ஒருநாளும் மாற்றுக்கட்சிக்கு செல்ல வேண்டும் என தான் எண்ணியதே இல்லை என்றும் கோகுல இந்திரா விளக்கம் அளித்துள்ளார்.