GK Vasan meets OPS For RK Nagar

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை, இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார் ஓ.பன்னீர்செல்வம்.

ஆர்.கே.நகர் இடை தேர்தலுக்கான வாக்கு பதிவுக்கு இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், இன்று ஜி.கே.வாசனை, அவர் சந்தித்த நிகழ்வு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தல் முடிந்த கையோடு, மக்கள் நல கூட்டணிக்கு முழுக்கு போட்டார் வாசன். ஆர்.கே.நகர் இடை தேர்தலிலும் அவரது கட்சி போட்டியிட வில்லை.

இந்நிலையில், ஓ.பி.எஸ் மற்றும் அவரது அணியின் முக்கிய தலைவர்கள், இன்று, தாமாக தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து பேசியுள்ளனர்.

இதனால், ஆர்.கே.நகரில் உள்ள ஜி.கே.வாசனின் ஆதரவாளர்கள் வாக்குகளான அரை சதவிகிதம், பன்னீர் அணிக்கு கிடைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில், திமுக-ஓ.பி.எஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது என்றும், வெற்றிக்கான வித்தியாசமும் மிகவும் குறைவாகவே உள்ளது என்றும் கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

இந்நிலையில், ஜி.கே.வாசனுடனான சந்திப்பு, ஆர்.கே.நகரில் உள்ள அவரது வாக்குகளை பன்னீர் பெறுவதற்கு உதவும் என்றும், அது அவர் அணிக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என்றும் கூறப்படுகிறது.