12 தொகுதிகள் கேட்ட ஜி.கே. வாசன்... ஐந்து விரல்களை விரித்து காட்டிய அதிமுக... கூட்டணிக்கு தயாராகுமா தமாகா..?
அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு விவகாரத்தில் பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் இழுபறி நீடித்துவரும் நிலையில், தமாகாவுடன் கூட்டணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாமகவுடன் தொகுதி உடன்பாடு இறுதியாகியுள்ளது. தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் தமாகாவுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை அதிமுக இன்று நடத்தியது. சைக்கிள் சின்னத்தைப் பெற்று தேர்தலில் போட்டியிட விரும்பும் தமாகா, 12 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் அதைச் சாதிக்க முடியும். எனவே, அதிமுகவிடம் 12 தொகுதிகளை தமாகா கேட்டு வருகிறது.
தமாகா 12 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கேட்ட நிலையில், 5 தொகுதிகளைப் பெற்றுக்கொள்ளும்படி அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 12 தொகுதிகள் வழங்க முடியாவிட்டாலும் 7 தொகுதிகளாவது வழங்க வேண்டும் என்று தமாகா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டணியில் பாபநாசம், பட்டுக்கோட்டை, அரியலூர், ஈரோடு, காங்கேயம், வால்பாறை உள்ளிட்ட தொகுதிகளை தமாகா கேட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக - தமாகா தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்த நிலையில், தொகுதி பங்கீடு ஓரிறு நாட்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.