அமமுகவுக்கு பரிசுப் பெட்டி …. தேர்தல் ஆணையம் அதிரடி !! டி.டி.வி.தினகரனுக்கு பொதுச் சின்னம் ஒதுக்கீடு !!
எதிர்வரும் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள 40 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலில் அமமுகவிற்கு இந்திய தேர்தல் ஆணையம் பரிசு பெட்டி சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இதையடுத்து அக்கட்சியினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு குக்கர் சின்னத்தை பொதுச்சின்னமாக ஒதுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தினகரன் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் விறுவிறுப்பாக நடைபெற்றது. அ.ம.மு.க-வை சுயேட்சையாக கருதுவதால், தினகரனுக்கு பொதுச்சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் தரப்பு வழக்கறிஞர், பதிவு செய்யாத கட்சிக்கு எப்படி பொதுசின்னம் ஒதுக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் கபில்சிபில், தினகரன் தனிமனிதர் அல்ல என்றும் கட்சியை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருப்பதாகவும் விளக்கம் அளித்தார்.
மீண்டும் இடைமறித்த தேர்தல் ஆணையம் தரப்பு, பதிவு செய்யாத கட்சிக்கு பொதுசின்னம் ஒதுக்க சட்டத்தில் இடமில்லை என கூறியது. முத்தரப்பின் அனல் பறக்கும் வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க உத்தரவிட முடியாது என மறுப்பு தெரிவித்தனர்.
அதேசமயம், தினகரன் தரப்புக்கு பொதுசின்னம் வழங்குவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். இந்நிலையில் தேர்தல் ஆணையம் டி.டி.வி.தினகரனுக்கு பரிசு பெட்டி சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது,
தமிழகத்தில் உள்ள 39 மக்களைவைத் தொகுதி, 18 சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெறும் தொகுதி , புதுச்சேரி மன்னளவை மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் டி.டி.வி.தினகரனுக்கு பரிசு பெட்டி சின்னம் ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது/