உங்க ஸ்மார்ட் ரேஷன் கார்டை வாங்கீட்டீங்களா ? எந்த தேதிக்குள் வாங்க வேண்டும் ? கெடு விதித்த தமிழக அரசு !!
ரேஷன் கடைகளில் உள்ள உங்க ரேஷன் கார்டுகளை இன்னும் 10 நாட்களுக்குள் வாங்கிவிட வேண்டும் என்றும் இல்லை என்றால் இனிமேல் கிடைக்காது என்றும் தமிழக உணவுத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ரேஷன் கார்டுகள் மூலமாக அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் பழைய ரேஷன் கார்டுகளுக்குப் பதில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஸ்மார்ட் கார்டுகளை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கு முன்பாக ரேஷன் கடை ஊழியர்கள் கடையில் உள்ள பாயிண்ட் ஆப் சேல் கருவியில் பதிவு செய்தால்தான், ஸ்மார்ட் கார்டு செயல்படத் தொடங்கும்.
இந்நிலையில் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ள 3 லட்சம் ஸ்மார்ட் கார்டுகளை இதுவரை உரியவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து உரியவர்களுக்கு மொபைல் போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் ஏராளமானோர் இன்னும் ஸ்மார்ட் கார்டுகளை பெற்றுக் கொள்ளாமல் அலட்சியமான உள்ளனர்.
இந்நிலையில் ஸ்மார்ட் கார்டுகளை வாங்காதவர்களும், வாங்கியும் பதிவு செய்யாதவர்களும், அவற்றை வரும் 19 ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் என உணவுத்துறை அறிவித்துள்ளது.
வரும் 19 ஆம் தேதிக்குள் ஸ்மார்ட் கார்டுகளை வாங்கவில்லை என்றால், அவைகள் உணவுத்துறை அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுத்துறை அலுவலகத்திற்கு சென்று ஸ்மார் கார்டுகளைப் பெறுவதில் ஏராளமான நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால் கொடுக்கப்பட்டுள்ள காலக் கெடுவுக்குள் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என பொது மக்களுக்கு உணவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.