வருமான வரித்துறை முன்பு ஆஜராக தடைவிதிக்கக்கோரும் கீதா லட்சுமியின் வழக்கு… உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
சென்னை வருமான வரித்துறையினர் நேரில் ஆஜராகுமாறு அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி எம்ஜிஆர் மருத்துவ பல்கலைககழக துணைவேந்தர் கீதா லட்சுமி தொடர்ந்த வழக்கு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் நேரில் ஆஜராக வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினார்கள்.
இந்தநிலையில், தனக்கு வருமான வரித்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் கீதாலட்சுமி மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் என் கணவர் சுகுமார் டாக்டராக உள்ளார். துணைவேந்தர் பதவியை ஏற்பதற்கு முன்பு நான், தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனராக பணிபுரிந்தேன். கடந்த வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியில் இருந்து 8-ந்தேதி காலை 6.30 மணி வரை வருமான வரித்துறையினர் சாலிகிராமத்தில் உள்ள எனது வீடு, பல்கலைக்கழகத்தில் உள்ள எனது அலுவலகத்தில் திடீரென சோதனை நடத்தினர்.
வருமான வரித்துறைச்சட்டம் பிரிவு 131-ன்படி வருமானவரித்துறை துணை இயக்குனர் எனக்கு கடந்த 7-ந்தேதி ஒரு சம்மன் அனுப்பியுள்ளார்.
அதில் நேற்று காலை 11.30 மணிக்கு வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்’ என்று எனக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால் என்னை நேரில் ஆஜராக வரவேண்டும் என உத்தரவிட வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்..
மேலும், அந்த சம்மனில் எதற்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று எதுவும் குறிப்பிடவில்லை. இதனால் அந்த சம்மனை ரத்து செய்யவேண்டும் என்றும் . எனக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு இன்று பிற்பகலில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.