மெரினா பீச்சுக்கே தனியா வர்றேன்... விசிக தொண்டர்களை வெறுப்பேற்றும் காயத்ரி ரகுராம்..!
மூளை இல்லாத விசிக. திருமாவளவன் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக ஆதரவாளரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருமாவளவனுக்கு எதிராக அவதூறாக டிவிட்டரில் பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராமை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
நடிகை காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை பற்றி அவதூறாக பதிவிட்டு, அதற்கு எதிர்ப்பு வந்த பின்பு அந்த பதிவை நீக்கியதாக கூறப்படுகிறது. காயத்ரி ரகுராமைக் கண்டித்து சென்னை மகாலிங்கபுரத்தில் இருக்கும் காயத்ரி ரகுராமின் வீட்டின் முன்பு பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் சிலர் வீட்டிற்குள் நுழைய முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை கலைந்து செல்ல கூறியதால், போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘’நேரத்தை விரயமாக்குகிறார்கள். நான் சென்னையில் இல்லை. மூளை இல்லாத விசிக. திருமாவளவன் இந்துக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். நான் வரும் 27ம் தேதி சென்னை திரும்புகிறேன். காலை பத்துமணிக்கு தனியாக சென்னை மெரினா பீச்சுக்கு வருகிறேன். அப்போது உங்களுக்கு நான் பதிலளிக்கிறேன்’’எனப் பதிவிட்டுள்ளார். இந்தப்பதிவு விசிக தொண்டர்களை மேலும் ஆத்திரப்படுத்தி உள்ளது.